அதெப்படி காஷ்மீர் தீவிரவாதிக்காக கருப்பு தினம் கடைபிடிக்கலாம்? பாகிஸ்தானுக்கு இந்தியா கடும் கண்டனம்
டெல்லி: ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதி புர்ஹான் வானி சுட்டுக் கொல்லப்பட்டதைக் கண்டித்து கருப்பு தினம் கடைபிடித்த பாகிஸ்தானுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
ஜம்மு காஷ்மீரில் ராணுவத்தினருடனான மோதலில் ஹிஸ்புல் முஜாகிதீன் இயக்க தளபதி புர்ஹான் வானி சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அங்கு வன்முறை சம்பவங்கள் வெடித்துள்ளன. பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் லாகூரில் கடந்த 15-ந் தேதி அமைச்சரவையைக் கூட்டி, சுட்டுக்கொல்லப்பட்ட புர்ஹான் வானியை சுதந்திர போராட்ட தியாகி என வர்ணித்தார்.

அவர் கொல்லப்பட்டதை கண்டித்து பாகிஸ்தானில் அரசு சார்பாக கடந்த 20-ந் தேதி கருப்பு தினம் கடைபிடிக்கப்பட்டது.
இதற்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக டெல்லியில் மத்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
காஷ்மீர் பிரச்சினையில் பாகிஸ்தானிலும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலும் கடந்த 2 நாட்களாக நடந்த ஊர்வலங்கள், நிகழ்ச்சிகள் குறித்து தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுதொடர்பான அறிக்கைகளையும் பார்க்க முடிந்தது.
இந்த நிகழ்ச்சிகளையெல்லாம் நடத்தியவர்கள், ஐ.நா. சபையால் பயங்கரவாதிகள் என அறிவிக்கப்பட்டவர்கள் என்பதை கவனத்தில் கொண்டுள்ளோம். இவர்கள்தான் கடந்த காலத்தில், ஒசாமா பின்லேடன், தலிபான் தலைவர் அக்தர் மன்சூர் ஆகியோர் பாகிஸ்தானில் கொல்லப்பட்டபோது எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியவர்கள்.
பாகிஸ்தான் அரசு இத்தகைய பயங்கரவாதிகளுக்கும், அவர்களது செயல்பாடுகளுக்கும் ஊக்குவிப்பும், ஆதரவும் அளித்து வருவதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவிக்கிறது.
நாட்டின் எந்தவொரு பகுதியிலும் வன்முறையையும், பயங்கரவாதத்தை தூண்டிவிடுவதையும், அவற்றுக்கு ஆதரவு தருவதையும் பாகிஸ்தான் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று மீண்டும் கூறிக்கொள்கிறோம். நமது நாட்டின் உள்நாட்டு விவகாரங்களில் வருந்தத்தக்க குறுக்கீடுகள் செய்வதில் இருந்து விலகி இருக்க வேண்டும்.
சட்டவிரோதமாக ஆக்கிரமித்திருக்கும் காஷ்மீரில் இருந்து பாகிஸ்தான் உடனே வெளியேற வேண்டும். இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகத்தில் ஊர்வலங்கள், போராட்டங்கள் நடத்தப்போவதாக அச்சுறுத்தல்கள் வருகின்றன. இந்திய தூதரகத்தை, அதன் அதிகாரிகளை, அவர்களது குடும்பங்களை பாதுகாக்க வேண்டும். இதை பாகிஸ்தான் அரசு உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு விகாஸ் ஸ்வரூப் கூறினார்.












Click it and Unblock the Notifications