நேபாளத்துக்கான சரக்கு போக்குவரத்தைத் தடுக்கவில்லை.. வெளியுறவுத் துறை அமைச்சகம் விளக்கம்
டெல்லி: நேபாளத்துக்கான அத்தியாவசிய பொருட்கள் எடுத்துச் செல்வதை இந்தியா தடுக்கவில்லை என்று வெளியுறவுத்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.
உலகின் ஒரே இந்துநாடான நேபாளத்தில் மன்னராட்சி முறை முடிவுக்கு கொண்டுவரப்பட்டு மக்களாட்சி முறை மலர்ந்தது. இதனைத் தொடர்ந்து அண்மையில் அந்நாட்டின் அரசியல் சாசனம் பிரகடனப்படுத்தப்பட்டது.

இந்து நாடாக இருந்த போதும் மதச்சார்ற்ற அரசியல் சாசனத்தை நேபாளம் பிரகடனம் செய்துள்ளது. இந்த அரசியல் சாசனத்தில் நேபாளத்தின் தென்பகுதியில் வாழும் இந்திய வம்சாவளியினர் இரண்டாந்தர குடிமக்களாக்கப்பட்டுள்ளதாக கிளர்ச்சிகள் வெடித்தன.
இதனைத் தொடர்ந்து இந்திய அரசும் நேபாள அரசியல் சாசன திருத்தத்துக்கான சில பரிந்துரைகளை அளித்தது. ஆனால் நேபாள அரசு இதனை நிராகரித்தது.
இதனால் இந்தியாவில் இருந்து நேபாளத்துக்கு அத்தியாவசிய பொருட்கள் எடுத்துச் செல்லப்படும் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதற்கு பதிலடியாக இந்திய டிவி சேனல்கள் ஒளிபரப்பை நேபாள கேபிள் ஆபரேட்டர்கள் நிறுத்தி வைத்தனர்.
இந்நிலையில் நியூயார்க்கில் உள்ள இந்திய வெளியவுத் துறையின் செய்தித் தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப், நேபாள விவகாரத்தில் நமது நிலைப்பாடு மிகவும் தெளிவானது. நேபாள மக்களும் அரசியல் கட்சிகளும் சூழலை புரிந்துகொண்டு தகுந்த முடிவை எடுக்க முன்வர வேண்டும். இந்தியாவிலிருந்து நேபாளத்துக்கு செல்லும் சரக்குப் போக்குவரத்து நிறுத்தப்படவில்லை. நேபாள எல்லை வரை அனைத்து லாரிகளும் செல்கின்றன. அதற்கு மேற்பட்ட பகுதிகளில் பதற்றமான சூழல் நிலவுகிறது. எல்லையைத் தாண்டி தங்களுக்கான பொருட்களை எடுத்துச் செல்ல வேண்டியது நேபாள அரசின் பொறுப்பு என்று விளக்கம் அளித்துள்ளார்.
மேலும் இது குறித்து வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், நேபாள வெளியுறவுத் துறை அமைச்சர் மகேந்திர பாண்டேவை தொடர்புகொண்டு பேசியிருப்பதாகவும் ஸ்வரூப் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications