சுற்றுலாவை மேம்படுத்த 78 லைட்ஹவுஸ்கள் கட்டப்படும்: அமைச்சர் கட்காரி
டெல்லி: சுற்றுலாத்துறையின் அடையாளமாக 78 கலங்கரை விளக்கங்கள் கட்டப்படும் என்று மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் டெல்லியில் நடந்த முதலீட்டாளர்கள் சந்திப்பில் கூறுகையில்,
உலகம் முழுவதும் கலங்கரை விளக்கங்கள் சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகின்றன. இந்தியாவில் சுற்றுலாத் துறை மேலும் வளர அதிக வாய்ப்புள்ளது. நாடு முழுவதும் 189 கலங்கரை விளக்கங்கள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. அதில் 78 கலங்கரை விளக்கங்கள் விரைவில் கட்டப்படும்.

குஜராத், மகாராஷ்டிரா, கோவா, கர்நாடகா, கேரளா, லச்சத்தீவு, தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திரா, ஒடிஷா, மேற்கு வங்கம் மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவுகளின் கடலோரப் பகுதிகளில் கலங்கரை விளக்கங்கள் அமைக்கப்பட உள்ளன.
இதில் மகாராஷ்டிரா மாநிலத்தில் மட்டும் சங்க் ராக், கன்ஹோஜி தீவு, உத்தர் பாயிண்ட், கோர்லாய் போர்ட், ஜெய்கத், ரத்னகிரி, தேவ்கத், வெங்குர்லா ராக்ஸ், தோல்கேஸ்வர் பாயிண்ட் ஆகிய 9 இடங்களில் கலங்கரை விளக்கங்கள் அமைக்கப்பட உள்ளன.
கோவாவில் போர்ட் அகுவாடா மற்றும் சாவ் ஜார்ஜ் ஆகிய இடங்களில் கலங்கரை விளக்கங்கள் அமைக்கப்படுகிறது. கலங்கரை விளக்கங்கள் அமைக்கப்படுவதால் உள்ளூர் பொருளாதாரம் மேம்படும். பலருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும், ஹோட்டல்கள், ரிசார்ட்டுகள், அருங்காட்சியங்கள் அமைக்கப்படும்.
தென் கொரியா, ஸ்காட்லாந்து, தென்னாப்பிரிக்காவில் கலங்கரை விளக்க சுற்றுலா நன்றாக நடந்து வருகிறது. இந்தியாவிலும் அது விரைவில் சூடு பிடிக்கும் என்றார்.












Click it and Unblock the Notifications