ராஜ்நாத் சிங்குடன் இஸ்ரேல் தூதர் சந்திப்பு! உள்நாட்டு பாதுகாப்பு குறித்து ஆலோசனை!!
டெல்லி: மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் டேனியல் கேமரூன் நேற்று சந்தித்துப் பேசினார்.
பாலஸ்தீனத்தின் காஸா மீது 50 நாட்களாக இஸ்ரேல் கொடூர இன அழிப்பை கட்டவிழ்த்துவிட்டது. இதில் 2 ஆயிரத்துக்கும் அதிகமான பாலஸ்தீனர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
இந்நிலையில் எகிப்தின் முன் முயற்சியில் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இயக்கம் இடையே நீண்டகால யுத்த நிறுத்தம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் இஸ்ரேலை ஆதரிக்கும் அதே நேரத்தில் காஸாவுக்கு கரிசனையையும் காட்டி ஊசலாட்ட நிலையை மேற்கொண்டது மத்திய அரசு.
இந்த நிலையில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கை நேற்று இஸ்ரேல் தூதர் டேனியல் கேமரூன் நேற்று சந்தித்தார். அப்போது, உள்நாட்டு பாதுகாப்பு தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகள் மீதான ஒப்பந்தம் குறித்து இருவரும் விவாதித்தனர்.
ராஜ்நாத் சிங்கிடம் இஸ்ரேல் தூதர் கூறுகையில், உள்நாட்டுப் பாதுகாப்பு விவகாரத்தில் இந்தியாவுடன் இஸ்ரேஸ் தகுந்த ஒத்துழைப்பை வழங்குவதில் முனைப்புடன் உள்ளது. இதற்கான உடன்படிக்கையில் சமீபத்தில் கையெழுத்திட்டது ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாகும் என்றார்.
அவரிடம் ராஜ்நாத் சிங் கூறுகையில், காஸாவில் போர்நிறுத்த ஒப்பந்தம் மேற்கொண்டிருப்பது வரவேற்கத்தக்கது' என்றார். ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கம் குறித்த கேள்விக்கு, "அவர்கள் உலகிற்கு அபாயகரமானவர்கள்' என்று டேனியல் கேமரூன் பதிலளித்தார்.