உற்பத்தியாகும் உணவுப் பொருட்களில் 40 சதவீதத்தை வீணடிக்கும் இந்தியா... ஷாக் தகவல்
கொல்கத்தா: வருடா வருடம் இந்தியா உணவு உற்பத்தியில் 40 சதவீத இழப்பை சந்தித்து வருவதாக இங்கிலாந்தைச் சேர்ந்த கல்வியாளர் ஒருவர் கூறியுள்ளார்.
உணவு தானியங்களை முறையாக பராமரிக்காதது, குளிர்சாதன வசதியை சரிவர செய்யாதது உள்ளிட்ட காரணங்களால் இந்த பேரிழப்பை இந்தியா சந்தித்து வருவதாக டிம் பாக்ஸ் என்ற இங்கிலாந்தைச் சேர்ந்த மெக்கானிக்கல் என்ஜீனியர்கள் அமைப்பின் தலைவர் கூறியுள்ளார்.

களத்திலிருந்து சந்தைக்கு வருவதற்குள் உணவுப் பொருட்கள் பல்வேறு இடர்பாடுகளைச் சந்திப்பதும் கூட முக்கிய காரணமாக இருப்பதாகவும் பாக்ஸ் கூறுகிறார்.
இதன் காரணமாக உற்பத்தியாகும் பொருட்களில் 40 சதவீதம் வீணாகிப் போவதாகவும் அவர் கூறுகிறார். இது ஒரு மிகப் பெரிய சோகம் என்றும் அவர் கவலை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், இந்தப் பொருட்கள் அனைத்தும் அழுகக் கூடிய உணவுப் பொருட்களாகும். இவற்றுக்குத் தனிக் கவனம் செலுத்தப்பட வேண்டும், முறையாக பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குளிர்சாதன வசதியும் சரிவர இருக்க வேண்டும். அப்போதுதான் உற்பத்தியாளர்களிடமிருந்து வாடிக்கையாளர்கள் கைக்கு அது போகும் வரை பாதுகாப்பாக கொண்டு செல்ல முடியம். ஆனால் அது இந்தியாவில் சற்று மோசமாகவே உள்ளது.
குறிப்பாக பசி, பட்டினியால் பலர் வாடி வரும் நிலையில் 40 சதவீத உணவுப் பொருட்கள் யாருக்கும் பலன் இல்லாமல் வீணாவது, அழிவது மிகப் பெரிய கொடுமையாகும். இதன் காரணமாக ஆண்டுதோறும் இந்தியாவில் 7.5 பில்லியன் டாலர் அளவுக்கு பொருள் இழப்பும் ஏற்படுகிறது.
இந்த நிலை மாறாவிட்டால் பொருளாதார நிலை மேம்பட வாய்ப்பு இல்லாமல் போய் விடும் என்றார் அவர்.
இந்தியாவைப் பொறுத்தவரை 60.6 லட்சம் டன் அளவிலான குளிர்சாதன வசதி தேவைப்படுகிறது. ஆனால் அதில் பாதி வசதிதான் தற்போது உள்ளது என்றார் அவர்.












Click it and Unblock the Notifications