எல்லையில் கொடியிறக்கும் நிகழ்ச்சியில் பரபரப்பு.. அடித்துக் கொண்ட இந்தியா - பாக். வீரர்கள்
சண்டிகர்: இந்தியா - பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் இந்திய, பாகிஸ்தான் வீரர்கள் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்ட வீடியோ காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
பஞ்சாப் மாநிலம் சண்டிகர் அருகே வாகா பகுதியில் இந்தியா, பாகிஸ்தான் எல்லை அமைந்துள்ளது. இங்கு நாள்தோறும் காலையில் இருநாட்டு வீரர்களும் கொடியேற்றி கதவைத் திறப்பதும், பின் மாலையில் கொடியை இறக்கி கதவை மூடுவதும் வழக்கம்.
இந்நிலையில், நேற்றும் வழக்கம் போல் இந்த கொடியிறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது எதிர்பாராத விதமாக பாகிஸ்தான் எல்லைப் பாதுகாப்புப்படை வீரர், இந்திய வீரர் மீது மோதினார்.
இதில், கோபமடைந்த இந்திய வீரர், பாகிஸ்தான் வீரரைத் தாக்கினார். இதனால், இருவருக்குமிடையே கைகலப்பு ஏற்பட்டது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த இருநாட்டு சகவீரர்களும் ஓடி வந்து அவர்களை விலக்கி வைத்தனர்.
தற்போது இந்த சம்பவம் வீடியோவாக இணையத்தில் வெளியாகி, வைரலாகப் பரவி வருகிறது.