ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா 100 கோடி டாலர் நிதியுதவி - மோடி அறிவிப்பு
டெல்லி: இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான ஆப்கானிஸ்தானில் கல்வி, சுகாதாரம், விவசாயம், திறன்மேம்பாடு, பெண்களுக்கு அதிகாரமளித்தல், மின்சார உற்பத்தி, உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் ஜனநாயக அமைப்புகளை பலப்படுத்த அந்நாட்டுக்கு இந்தியா 100 கோடி அமெரிக்க டாலர்களை நிதியாக வழங்கவுள்ளது.
இந்தியா வந்துள்ள ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கானி, டெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடியை நேற்று சந்தித்து பேசினார். அப்போது, ஆப்கானிஸ்தானில் கல்வி, சுகாதாரம், விவசாயம், திறன்மேம்பாடு, பெண்களுக்கு அதிகாரமளித்தல், மின்சார உற்பத்தி, உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் ஜனநாயக அமைப்புகளை பலப்படுத்த அந்நாட்டுக்கு இந்தியா 100 கோடி அமெரிக்க டாலர்களை நிதியுதவியாக வழங்கும் என பிரதமர் மோடி அறிவித்தார்.

இந்தியா-ஆப்கானிஸ்தான் இடையிலான பாதுகாப்பு கூட்டுறவு ஒப்பந்தத்தின்படி, தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் உறுதியாக செயல்படுவோம் என இருநாட்டு தலைவர்களும் கூட்டாக அறிவித்தனர். பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் அளித்து ஆதரவு அளிக்கும் நடவடிக்கைகளுக்கு முடிவுகட்ட வேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.
மேலும் பயங்கரவாதிகளை பயங்கரவாத செயல்களை செய்ய ஏவுதல், பின்னர் அவர்களுக்கு அடைக்கலம் அளித்தல், ஆகிய நடவடிக்கைகளை பாகிஸ்தான் கைவிட வேண்டும் என இரு தலைவர்களும் தங்கள் கூட்டறிக்கையில் தெரிவித்தனர்.
ஆப்கானிஸ்தானுக்கு விலைகுறைந்த உலகத்தரம் வாய்ந்த மருந்துகள் மற்றும் சூரிய சக்தி தொடர்பான தொழில்நுட்ப ஒத்துழைப்பை இந்தியா வழங்கும் எனவும் அதிபர் அஷ்ரப் கானியிடம் உறுதியளித்த பிரதமர் மோடி, ஆப்கானிஸ்தான் அரசுக்கு பல்வேறு வழிகளில் உதவி செய்ய சர்வதேச சமுதாயத்தை இந்தியா வலியுறுத்தும் எனவும் இந்த சந்திப்பின்போது குறிப்பிட்டார்.
மேலும், இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையே தேடப்படும் நபர்களை பரிமாறிக்கொள்ளும் உடன்படிக்கை, பொது மற்றும் வர்த்தக விவகாரங்களில் ஒத்துழைப்பு, விண்வெளியை அமைதிக்காக மட்டும் பயன்படுத்துவது ஆகிய மூன்று ஒப்பந்தங்கள் இன்று கையொப்பமாகின.












Click it and Unblock the Notifications