பாகிஸ்தானின் ஒவ்வொரு புல்லட்டிற்கும் 4 புல்லட் மூலம் பதிலடி தருகிறோம்: மத்திய அரசு
ஸ்ரீநகர்: பாகிஸ்தானின் ஒவ்வொரு புல்லட்டிற்கும், இந்தியா 4 புல்லட்கள் மூலம் பதிலடி கொடுப்பதாக மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே காஷ்மீர் எல்லையில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில் போர் நிறுத்த ஒப்பந்தம் அமலில் இருக்கிறது. ஆனால், இந்த ஒப்பந்தத்தை மீறி அவ்வப்போது எல்லையில் உள்ள நமது ராணுவ சாவடிகள் மற்றும் கிராமங்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.
அண்மைக் காலமாக எல்லையில் பாகிஸ்தானின் அத்துமீறல் அதிகரித்துள்ளது. பாகிஸ்தானிற்கு இந்தியா தக்க பதிலடி தாக்குதல் கொடுத்து வருகிறது. ஆனபோதும், எல்லையோர கிராமங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் எல்லையில் துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்ட கிராமங்கள் மற்றும் முகாம்களை மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் பார்வையிட்டார். அப்போது செய்தியாளர்கள் மத்தியில் பேசிய ஜிதேந்திர சிங், ‘நம் மீது பாகிஸ்தான் ராணுவம் சுடும் ஒவ்வொரு புல்லட்டிற்கும், நாம் 4 புல்லட்களை சுட்டு பதிலடி கொடுத்து வருகிறோம். எல்லையில் உள்ள மக்களின் மனவலிமையால் நான் மிகவும் மகிழ்ச்சி, திருப்தி மற்றும் பெருமை அடைகிறேன். இந்திய ராணுவத்தின் பதிலடியால் நாங்கள் திருப்தி அடைந்துள்ளோம் என்று மக்களும் கூறியுள்ளனர்.
மக்கள் குடியிருப்பு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கி சூடு நடத்துவதை ஒட்டுமொத்த உலகமே பார்த்துக் கொண்டு இருக்கிறது. இந்தியாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதையடுத்து, சூழ்நிலையும் தற்போது மாறிவிட்டது என்று பாகிஸ்தான் இப்போது புரிந்துக் கொண்டு இருக்கும். இது பழைய நிலையில்லை. பல்வேறு ஆண்டுகளுக்கு பின்னர், நமது ராணுவம் கொடுத்த முதலாவது தக்கபதிலடி இதுவாகும். இந்தமுறை பாகிஸ்தான் ராணுவம் இதுதவறு என்று உணராத வரையிலும், ஆயுதத்தை அதுவாகவே கீழே போடும் வரையிலும் இந்தியா தனது பதிலடியை நிறுத்தக் கூடாது என்று பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சரிடம் வலியுறுத்துமாறு அவர்கள்(எல்லை மக்கள்) என்னிடம் கூறியுள்ளனர்.
சர்வதேச எல்லையில் வீட்டிற்குள் பதுங்கு குழிகள் அமைப்பது தொடர்பாக எல்லை பாதுகாப்பு படை டி.ஜி.யிடம் எங்களுடைய கருத்துக்களை தெரிவித்துள்ளோம். இதனை செயல்படுத்த, இதுதொடர்பான திட்டம் முறைப்படுத்தப்படும் என்று எலலைப் பாதுகாப்பு படை டி.ஜி. எங்களுக்கு உறுதி அளித்துள்ளார்' எனத் தெரிவித்தார்.