லோக்சபா தேர்தல் வாக்கு எண்ணிக்கை... நாள் முழுக்க விறுவிறுப்பு!
டெல்லி: நாடு முழுவதும் 9 கட்டமாக நடத்தப்பட்டு, அதில் பதிவான கிட்டத்தட்ட 55 கோடி வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை தொடங்கி விறுவிறுப்புடன் நடந்தது.
லோக்சபா தேர்தலுடன், ஒருங்கிணைந்த ஆந்திரா, ஒடிசா, சிக்கிம், அருணாசல பிரதேசம் ஆகிய 4 மாநில சட்டசபைகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. அதேபோல தமிழகத்தில் ஆலந்தூர் சட்டசபை தொகுதிக்கு இடைத்தேர்தலும் நடந்தது.
ஏப்ரல் மாதம் 7-ந் தேதி தொடங்கி கடந்த 12-ந் தேதி வரை அமைதியாக நடந்து முடிந்த இந்த நாடாளுமன்ற தேர்தலில் நாடு முழுவதும் தேசிய கட்சிகளின் சார்பில் 1,591 பேர், மாநில கட்சிகளின் சார்பில் 529 பேர், பதிவு பெற்ற மற்றும் அங்கீகரிக்கப்படாத கட்சிகளின் சார்பில் 2,897 பேர், சுயேச்சையாக 3,234 பேர் என மொத்தம் 8,251 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
மொத்த வாக்காளர்களில் 55 கோடி பேர் வாக்களித்தனர். இதுவரை இல்லாத அளவுக்கு இத்தேர்தலில் 66.38 சதவீத வாக்குப்பதிவு நடந்தது. மே 12ம் தேதி இறுதிக் கட்ட வாக்குப்பதிவு நடந்தது. இதைத் தொடர்ந்து இன்று வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.
நாடு முழுவதும் 989 மையங்கள் அமைக்கப்பட்டு அங்கு வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. 10 லட்சம் அரசு ஊழியர்கள் வாக்குகளை எண்ணும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.