பாகிஸ்தானுக்கு இனி ஒரு சொட்டு நீர் கூட போகாது.. ஒரே நேரத்தில் 6 மெகா அணைகள்.. அதிரடி மோடில் இந்தியா!
ஸ்ரீநகர்: பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஏற்கனவே, இதன் ஒரு பகுதியாக சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தி வைத்திருந்தது. இதற்கிடையே கையோடு 6 முக்கியமான கட்டுமானத்தையும் இந்தியா தொடங்கியுள்ளது. பாகிஸ்தானுக்கு செல்லும் சிந்து நதி நீரைத் தடுத்து நிறுத்த இந்த மெகா திட்டங்கள் உதவும்.
பஹல்காமில் கடந்த மாதம் நடந்த தீவிரவாதத் தாக்குதல் நாட்டையே உலுக்கிப் போட்டது. இந்தத் தாக்குதலை நடத்திய தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் உதவியிருக்கும் என்று சந்தேகிக்கப்படுகிறது. இதன் காரணமாக பாகிஸ்தான் மீது இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பாகிஸ்தானியர்களின் விசா ரத்து, பாகிஸ்தான் விமானங்கள் வான்வெளியைப் பயன்படுத்தத் தடை எனப் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

சிந்து நதி நீர் ஒப்பந்தம்
இருப்பினும், சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்துவதாக இந்தியா அறிவித்தபோது பலருக்கும் ஒரு கேள்வி இருந்தது. அதாவது 1960ம் ஆண்டு முதல் அமலில் இருக்கும் சிந்து நதி நீர் ஒப்பந்தத்தால் இந்தியாவில் அங்குப் பெரியளவில் எந்தவொரு அணை அல்லது நீர் தேக்கத் திட்டங்களையும் கட்ட அனுமதி இல்லாமல் இருந்தது. இதனால் சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை ரத்து செய்வதால் மட்டும் நீரைத் தடுத்து நிறுத்த முடியுமா எனப் பலரும் கேள்வி எழுப்பினர்.
இது தொடர்பான கேள்வி எதிர்க்கட்சி கூட்டத்திலும் எழுப்பப்பட்ட நிலையில், அப்போது மத்திய அரசு முக்கியமான ஒரு விளக்கத்தை அளித்திருந்தது. அதாவது சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைக்கும் அறிவிப்பு என்பது உடனடியாக ஏற்படும் விளைவுகள் பற்றியது இல்லை என்றும் இது ஓர் எச்சரிக்கை என்றும் கூறியிருந்தது. மேலும், இது எதிர்காலத் திட்டத்திற்கான நடவடிக்கை என்றும் கூறியிருந்தது.
6 மேஜர் திட்டங்கள்
அதற்கேற்பச் சிந்து நதி நீர் விவகாரத்தில் இந்தியா அடுத்தடுத்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி காஷ்மீரில் உள்ள இரண்டு நீர்மின் திட்டங்களில் நீர்த்தேக்கச் சேமிப்புத் திறனை அதிகரிக்க மத்திய அரசு தொடங்கியுள்ளது. குறிப்பாக, கடந்த வாரம் சலால் மற்றும் பாக்லிஹார் அணைகளில் வண்டல்களை அகற்றி நீர் சேமிப்பு திறனை அதிகரிக்கும் நடவடிக்கை தேசிய நீர்மின்சாரக் கழகத்தால் மேற்கொள்ளப்பட்டது.
மேலும், அங்கு மொத்தம் 6 புனல் மின்நிலையத் திட்டங்களின் கட்டுமானம் தடைப்பட்டு இருந்த நிலையில், அதையும் துரிதப்படுத்தும் நடவடிக்கையில் இந்தியா இறங்கியுள்ளது. முதற்கட்டமாக சவல்கோட்டில் 1,856 மெகாவாட் புனல் மின் திட்டம், கீர்த்தாய் I மற்றும் I மூலம் 1,320 மெகாவாட் உற்பத்தி செய்யும் புனல் மின் நிலைய திட்டம், துலில் 1,000 மெகாவாட் புனல் மின்நிலையத் திட்டம் ஆகிய திட்டங்களைத் தொடங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
ஏன் முக்கியம்
இந்த அனைத்துப் புனல் மின்நிலையத் திட்டங்களும் முடிந்தால் காஷ்மீரில் 10,000 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும். மேலும், நீர் தேக்க திறனும் அதிகரிக்கும் என்பதால் பாசனம் மற்றும் வீட்டு உபயோகத்திற்கு அதிகத் தண்ணீர் கிடைக்கக்கூடும். வரும் காலங்களில் இதுபோல கூடுதல் திட்டங்களை இந்தியா ஆரம்பிக்கும். அப்போது சிந்து நதியை நாம் முழுமையாகக் கட்டுப்படுத்தும் சூழல் உருவாகும்.
சிக்கல் இல்லை
முன்பு, சிந்து நதி நீர் ஒப்பந்தம் அமலில் இருந்த வரை அந்தப் பகுதியில் இந்தியா எதாவது கட்டுமானத்தை மேற்கொள்ள வேண்டும் என்றால் 6 மாதங்களுக்கு முன்பே பாகிஸ்தானிடம் தெரிவிக்க வேண்டும். அப்போது பாகிஸ்தான் தொடர்ச்சியாகப் பல்வேறு சிக்கல்களைத் தொடர்ந்து ஏற்படுத்தி வந்தது. ஆனால், இப்போது சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியா கட்டுமானங்களைத் துரிதமாக மேற்கொள்ள முடியும்.












Click it and Unblock the Notifications