தலிபான்களின் அடுத்த இலக்கு இந்தியா: எம்.கே. நாராயணன் திடுக் தகவல்
டெல்லி: தலிபான் தீவிரவாதிகளின் அடுத்த இலக்கு இந்தியாதான் என்று முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகரும், இந்நாள் மேற்கு வங்க ஆளுநருமான எம்.கே.நாராயணன் திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளார்.
டெல்லியில் தேசிய புலனாய்வு ஏஜென்சி (என்.ஐ.ஏ.)யின் விழா ஒன்றில் பங்கேற்றுப் பேசிய எம்.கே. நாராயணன், இந்தியாவில் தாக்குதல் நடத்த ஆப்கானிஸ்தானில் உள்ள தலிபான் அமைப்புகள் திட்டமிட்டுள்ளதாக கூறினார்.
இதற்கு பாகிஸ்தானில் உள்ள ஜிகாதிகள் அமைப்பும் உதவுவதாகவும் அவர் தெரிவித்தார்.

தலிபான் அச்சுறுத்தல்
பாகிஸ்தான், சீனா எல்லைப் பகுதி வழியாகவே, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் எல்லை வழியாகவோ இந்தியாவிற்குள் நுழைந்து தீவிரவாத குழுக்கள் தாக்குதலை நடத்தும் அச்சுறுத்தல் உள்ளதாகவும் அவர் கூறினார்.
தலிபான்கள் வளர்ச்சி
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் நாடுகளில் தலிபான்களின் வளர்ச்சி அபரிமிதமாக உள்ளது. அடிக்கடி அந்நாடுகளில் நடைபெறும் தாக்குதல்களைக் கொண்டே நாம் அறியலாம். காரணம் அந்நாடுகளில் தீவிரவாதத்தை ஒடுக்க சரியான நடவடிக்கை எடுக்காததே காரணம் என்றார்.
அடுத்த இலக்கு இந்தியா
மேலும் தலிபான் தீவிரவாதிகளின் அடுத்த இலக்கு இந்தியாவில் ஊடுருவி தாக்குதல் நடத்துவதுதான். பல்வேறு தீவிரவாத குழுக்கள் இந்த தாக்குதலை நடத்த திட்டமிட்டுள்ளனர் என்று எச்சரிக்கை விடுத்தார்.
இந்தியன் முஜாகிதீன்
ஏற்கனவே லக்சர் இ தொய்பா உடன் தொடர்புடைய இந்தியன் முஜாகிதீன் அமைப்பினர் மும்பையில் தாக்குதல் நடத்தியுள்ளனர். அல் குவைதா, லக் சர் இ தொய்பா போன்ற தலிபான் இயக்கத்தினர், இந்தியாவில் உள்ள தீவிரவாத அமைப்புக்களின் உதவியுடன் மீண்டும் மற்றொரு தாக்குதலை நடத்த ரகசியத் திட்டங்களை தீட்டி வருவதாகவும் அவர் கூறினார்.
தீவிரவாதத்தை ஒடுக்க வேண்டும்
எனவே தீவிரவாதத்தை ஒடுக்க உலக அளவில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தியாவில் ஊடுருவி நாசவேலை செய்ய நினைக்கும் தீவிரவாதிகளை ஒடுக்க ஒருபோதும் மென்மையான போக்கை கடைபிடிக்க வேண்டியதில்லை என்றும் எம்.கே. நாராயணன் கூறினார்.












Click it and Unblock the Notifications