9 மாதம் முன்பே சட்டசபையை கலைத்தாரே.. சந்திர சேகரராவ் வெல்ல முடியுமா? இந்தியா டுடே பரபர சர்வே
Recommended Video
ஹைதராபாத்: சட்டசபை பதவிக்காலம் முடிவடைவதற்கு ஒன்பது மாதங்கள் முன்பாகவே அமைச்சரவையை கூட்டி சட்டசபையை கலைக்க பரிந்துரை செய்தார் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ்.
மீண்டும் ஆட்சிக்கு வந்து விடுவோம் என்ற அபார நம்பிக்கைதான் இதற்கு காரணம். உண்மையிலேயே அவர் நம்பிக்கை பலிக்குமா? மக்கள் மன நிலை என்ன என்பது குறித்து இந்தியா டுடே செய்திச் சேனல் நடத்திய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளன.
இந்தியா டுடே ஆக்சிஸ்-மை-இந்தியா போல் இணைந்து நடத்திய கருத்து கணிப்பு ஆச்சரியப்படத்தக்க சில முடிவுகளை கொடுத்துள்ளது.
சந்திரசேகர ராவ் சாம்ராஜ்யம்
கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிப்பது இதைத்தான்: 4 முதல் நான்கரை ஆண்டு காலம் வரை ஆட்சி செய்துள்ள போதிலும், சந்திரசேகரராவுக்கு வாக்களிக்க தயாராக இருப்பதாக தெலுங்கானாவில், 43 சதவீத வாக்காளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதன் மூலம் சந்திரசேகரராவ் கணிப்பு ஏறத்தாழ பலித்து விடும் சூழ்நிலைதான் அங்கு நிலவுகிறது என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது.
காங்கிரஸ் இரண்டாவது இடம்
இந்த பட்டியலில் இரண்டாவது இடம் காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் உத்தம் குமார் ரெட்டிக்கு. ஆனால் உத்தம்குமார் ரெட்டிக்கு ஆதரவாக உள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை என்பது சந்திரசேகரராவ் கட்சியுடன் ஒப்பிட்டால் மலைக்கும், மடுவுக்கும் நடுவேயான வித்தியாசமாக உள்ளது. ஏனெனில் உத்தம் குமார் ரெட்டிக்கு கட்சிக்கு வாக்களிப்போம் என்று 18 சதவீதம் பேர் கூறியுள்ளனர்.
பாஜக மகிழ்ச்சி
இந்த கருத்துக் கணிப்பில் பாரதிய ஜனதா கட்சி தலைமை மகிழ்ச்சி அடைவதற்கு ஒரு காரணம் உள்ளது. அது என்னவென்றால் பாரதிய ஜனதா கட்சியின் தெலுங்கானா மாநில தலைவர் கிஷன் ரெட்டிக்கு 15 சதவீத வாக்காளர்கள் ஆதரவளித்துள்ளனர். காங்கிரஸுக்கும், பாஜகவும் நடுவேயான வித்தியாசம் என்பது 3 சதவீதம் என்ற அளவில்தான் உள்ளது. அமித் ஷா, மோடி உள்ளிட்ட பிரச்சார பீரங்கிகள் தேர்தல் களத்தில் குதித்த, பிறகு காங்கிரசுக்கு பாஜக கடும் சவாலாக உருவெடுக்கும் என்பதை இந்த கருத்துக் கணிப்பின் சாராம்சம்.
தெலுங்கானா மாநிலம் உருவானது
ஆந்திராவில் இருந்து தெலுங்கானா தனி மாநிலமாக உருவாக முக்கிய காரணம் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியின் தலைவரும் தற்போதைய காபந்து முதல்வருமான சந்திரசேகரராவ்தான். அவரது தீவிர போராட்டத்தின் காரணமாக தான் 2014ஆம் ஆண்டு தெலுங்கானா மாநிலம் உருவானது. அதன் முதல் சட்டசபை தேர்தலில் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி வெற்றி பெற்று சந்திரசேகரராவ் முதல்வரானார்.
சிறப்பான செயல்பாடு
சந்திரசேகரராவ் அரசு சிறப்பாக செயல்பட்டதாக கருத்துக்கணிப்பில் பங்கேற்றதில் 48 சதவீதம் வாக்காளர்கள் தெரிவித்தனர். 26% வாக்காளர்கள் மோசமாக செயல்பட்டதாகவும், 16% பேர் பரவாயில்லை என்றும் தெரிவித்துள்ளனர். மொத்தம் 7110 வாக்காளர்களிடம், இந்தியா டுடே ஆக்சிஸ் மை இந்தியா போல், தொலைபேசி இன்டர்வியூ நடத்தியதில் இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது.