ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் இணையும் இந்தியர்கள்- உளவுத்துறை ஷாக் ரிப்போர்ட்
டெல்லி: ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக போராட இந்தியாவில் இருந்து 18 பேர் சென்றுள்ளதாக அதிகாரப்பூர்வமாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. அவர்களை திரும்ப அழைத்துவர முயற்சிகள் எடுக்குமாறு அரசை உளவத்துறை கேட்டுக்கொண்டுள்ளது. சமூக வலைத்தளங்கள் மூலமாக நடைபெறும் முளைச்சலவையால் கவரப்பட்டு பல இளைஞர்கள் தீவிரவாதிகளாக மாறிவருவதாகவும் அந்த உளவுத்துறை எச்சரிக்கிறது.

ஈராக், சிரியா பயணம்
ஈராக்கிலும், சிரியாவிலும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத குழு செயல்பட்டுவருகிறது. அரசு படைகளுக்கு எதிராக தீவிர தாக்குதலை முன்னெடுத்துள்ள அந்த அமைப்பில் இந்தியாவை சேர்ந்த சில அனுதாபிகளும் இணைந்துள்ளதாகவும், அடுத்த தாக்குதலை இந்தியாவில் நடத்த ஐஎஸ்ஐஎஸ் திட்டமிட்டுள்ளதாகவும் இந்திய உளவுத்துறை ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தது.

18 பேர் உறுதி
இப்போது அதை உறுதி செய்யும்விதமாக, இந்தியாவில் இருந்து சென்ற 18 பேர் ஈராக்கிலும், சிரியாவிலும் ஆயுத போராட்டத்தில் ஈடுபட்டிருப்பதாக உளவுத்துறை ஆதாரங்களை வெளியிட்டுள்ளது.

மூளைச் சலவை
இந்த பதினெட்டு பேரும், தீவிரவாத அமைப்புகளில் இருந்தவர்கள் கிடையாது என்ற போதிலும், ஈராக் விஷயமாக மூளைச்சலவை செய்யப்பட்டு, ஆயுத போராட்டத்தில் கலந்து கொள்ள சென்றவர்கள் என்று உளவுத்துறை தெரிவித்துள்ளது.

சமூக வலைத்தளங்களின் பங்கு
சமூக வலைத்தளங்கள், யூடூப் போன்றவற்றின் மூலமாக பல இளைஞர்களுக்கும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் சேருவதற்கான உத்வேகம் ஊட்டப்படுவதாகவும், அதன்விளைவாக தேசம் கடந்து பலரும் ஈராக், சிரியாவுக்கு செல்வதாகவும் உளவுத்துறை எச்சரித்துள்ளது.
இந்தியாவை சேர்ந்த 18 பேரை மீட்டுவர நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும், இனியும் இதுபோல தீவிரவாத அமைப்புகளில் இந்தியர்கள் சேர அனுமதிக்க கூடாது என்று அரசுக்கு உளவுத்துறை அறிக்கையளித்துள்ளது.

மேற்கத்திய நாடுகளிலும் அதே நிலை
இதனிடையே ஐரோப்பா, அமெரிக்க நாடுகளில் இருந்தும், சுமார் 2000 பேர் ஈராக், சிரியாவுக்கு பயணப்பட்டு சண்டை போட்டுவருவதாக மேற்கத்திய ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. புனிதப்போர் என்று கூறி, ஐரோப்பா, அமெரிக்காவில் இருந்து ஜிகாதிகள் ஆள்பிடிப்பதாக அந்த ஊடகங்கள் குற்றம்சாட்டுகின்றன.












Click it and Unblock the Notifications