காஷ்மீர் - பாக் எல்லையில் விழுந்து நொறுங்கிய இந்திய ராணுவ ஹெலிகாப்டர்.. பரபர சம்பவம்.. என்ன நடந்தது?
ஸ்ரீநகர்: காஷ்மீர் எல்லையில் இந்திய ராணுவத்திற்கு சொந்தமான ஹெலிகாப்டர் இன்று விழுந்து நொறுங்கியது. ஹெலிகாப்டரில் பயணித்தவர்கள் நிலை குறித்த விவரம் வெளியாகவில்லை.
Recommended Video
வடக்கு காஷ்மீரில் இருக்கும் குரேஸ் செக்டார் பகுதி அருகே இந்த சம்பவம் நடந்துள்ளது. எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்த பிஎஸ்எப் படை வீரர் ஒருவருக்கு மருத்துவ அவசரம் என்பதால் அவரை மீட்க இந்திய ராணுவம் மூலம் ஹெலிகாப்டர் அனுப்பப்பட்டது.
சீட்டா வகை ராணுவ ஹெலிகாப்டர் அனுப்பப்பட்ட நிலையில் குரேஸ் செக்டார் அருகே செல்லும் போது அந்த ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்கு உள்ளானது. குஜ்ரான் நல்லா என்று பகுதியில் இந்த விபத்து நடந்து இருக்கலாம் என்று இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
ஜம்மு காஷ்மீரில் பந்திபோரா மாவட்டத்தில் இந்த பகுதி உள்ளது. பாகிஸ்தான் - இந்தியா எல்லை கட்டுப்பாட்டு பகுதிக்கு மிக அருகில் இந்த இடம் உள்ளது.
இந்த ஹெலிகாப்டர் விபத்திற்கான காரணம் தெரியவில்லை. இதனால் அங்கு கொஞ்சம் பதற்றமான சூழ்நிலை காணப்படுகிறது. விபத்து நடந்த நேரத்தில் அங்கு பனி மூட்டம் அதிகமாக இருந்தது.
தெலங்கானா ஹெலிகாப்டர் விபத்து - தமிழக பெண் விமானி உள்பட 2 பேர் உடல் கருகி பலி
இது ஒருவேளை விபத்திற்கு காரணமாக இருக்கலாமா என்ற கோணத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. கீழே விழுந்து நொறுங்கிய ஹெலிகாப்டரை கண்டுபிடிப்பதற்காக தற்போது இங்கே தரைப்படை மூலம் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது. அதேபோல் இந்திய ராணுவத்தின் மற்ற சில ஹெலிகாப்டர்கள் அந்த பகுதிக்கு மீட்பு பணிக்காக அனுப்பப்பட்டுள்ளது.
ஹெலிகாப்டரில் பயணித்தவர்கள் நிலை குறித்த விவரம் வெளியாகவில்லை. அந்த ஹெலிகாப்டரில் இரண்டு ராணுவ வீரர்கள் இருந்தது குறிப்பிடத்தக்கது.