மணிப்பூர்- வன்முறையாளர்களுக்காக களமிறங்கிய ஆயிரக்கணக்கான பெண்கள்.. மனித நேய முகத்தை காட்டிய ராணுவம்!
இம்பால்: மணிப்பூரில் வன்முறைகள் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருக்க, வன்முறையாளர்களுக்கு ஆதரவாக ஆயிரக்கணக்கான பெண்கள் களமிறங்கிய போதும் நமது பாதுகாப்பு படையினர் மனிதநேய அணுகுமுறையையே கடைபிடிக்கின்றனர்; மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பு படையினருக்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என ராணுவம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
Recommended Video
மணிப்பூர் மாநிலத்தில் 2 மாதங்களாக வன்முறைகள் தொடருகின்றன. இந்த வன்முறைகளில் 100க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். பல்லாயிரகணக்கான மக்கள் மணிப்பூரில் இருந்து வெளியேறி அகதிகளாகிவிட்டனர். இந்த துயரத்துக்கு முடிவுகட்ட மணிப்பூரில் 50,000க்கும் அதிகமான பாதுகாப்பு படையினர் களமிறக்கப்பட்டுள்ளனர்.
ஆனால் அமைதியை நிலைநாட்ட பாதுகாப்பு படை மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு இடையூறாக, வன்முறை கும்பல்களுக்கு ஆதரவாக மணிப்பூர் பெண்களே களத்தில் இறங்குவதால் இணக்கமான போக்கையே ராணுவ வீரர்கள் பின்பற்றி வருகின்றனர்.

கிழக்கு இம்பாலில் வன்முறையில் ஈடுபடும் 12 வன்முறையாளர்களை பாதுகாப்பு படையினர் அண்மையில் கைது செய்தனர். இந்த 12 பேரும் பாதுகாப்பு படை வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்டனர். இத்தம் கிராமத்தில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட சிறிது நேரத்தில் பாதுகாப்பு படை எதிர்பாராத சம்பவம் நிகழ்ந்தது. வாகனங்கள், ஆம்புலன்ஸ்களில் ஆயிரக்கணக்கான பெண்கள் அழைத்துவரப்பட்டு பாதுகாப்பு படையின் வாகனத்தை மறித்தனர். இதனால் ராணுவ வீரர்கள் பொதுமக்களை, பெண்களை மீறி 12 வன்முறையாளர்களை அழைத்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. பாதுகாப்பு படையினர் எந்த கடும் நடவடிக்கையும் மேற்கொண்டு பொதுமக்களை, பெண்களை அங்கிருந்து விரட்டியடித்திருக்க முடியும். ஆனால் நமது பாதுகாப்பு படை வீரர்களோ அப்படி செய்யாமல், வன்முறையாளர்கள் 12 பேரையும் பெண்களின் கோரிக்கையை ஏற்று அவர்களிடம் ஒப்படைத்துவிட்டு திரும்பினர்.
இது தொடர்பாக SpearCorps.IndianArmy தமது ட்விட்டர் பக்கத்தில் விரிவான வீடியோவை வெளியிட்டுள்ளது. அதில் கிழக்கு இம்பாலில் பாதுகாப்பு படையினர் எப்படி எல்லாம் மறிக்கப்பட்டனர்? பெண்கள் எத்தனை ஆயிரம் பேர் திரண்டிருந்தனர்? என்கிற காட்சிகள் விரிவாகவே இடம்பெற்றுள்ளன. இந்த வீடியோவின் இறுதியில், மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட இரவு பகலாக பாடுபட்டு வரும் பாதுகாப்பு படையினருக்கு அனைத்து தரப்பு பொதுமக்களும் ஒத்துழைப்பு தர வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
எத்தனை துயரமான, கடினமான சூழ்நிலை வந்த போதும் பொதுமக்கள் மீது தாக்குதல்கள் நடத்தாமல் நமது ராணுவ வீரர்கள் மனிதநேய முகத்தை மணிப்பூரில் வெளிப்படுத்தி இருப்பது பெரும் பாராட்டுதலுக்குரியதாக கொண்டாடப்படுகிறது. அதே நேரத்தில் ஒத்துழைப்பு தர வேண்டிய பொதுமக்கள், இப்படி இடையூறாக இருப்பதால் மணிப்பூரில் எப்போது அமைதி திரும்புமோ? என்கிற கவலையும் வெளிப்படுத்தப்படுகிறது.












Click it and Unblock the Notifications