பாகிஸ்தான் சிறுவனுக்கு புத்துயிர் கொடுத்த இந்திய டாக்டர்கள்
டெல்லி: கிட்னி மற்றும் ஈரல் பாதிப்பால் அவதிப்பட்ட 9வயது பாகிஸ்தான் சிறுவனுக்கு நொய்டா மருத்துவமனையில் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் லாகூர் நகரில் கடை நடத்திவருபவர் ஆசிப் இலாஹி. இவரது மனைவி உனைசா. இத்தம்பதியின் 9வயது மகன் அமர் ஆசிப், 4ம் வகுப்பு படித்துக்கொண்டுள்ளான். கிட்னி மற்றும் ஈரலில் ஏற்பட்ட பாதிப்பால் அவதிப்பட்ட சிறுவனை, மேல் சிகிச்சைக்காக டெல்லியையடுத்த நொய்டாவிலுள்ள போர்டிஸ் மருத்துவமனைக்கு அழைத்துவந்தனர். இருநாட்டு தூதரக அதிகாரிகளும் இதற்கு உதவிகரமாக இருந்துள்ளனர்.
நொய்டா மருத்துவமனையில், சிறுநீரக பிரிவு மூத்த ஆலோசகர் டாக்டர்.துஷ்யந்த் நாடார், டாக்டர்.விவேக் விஜ் ஆகியோர் அடங்கிய, 10 பேர் கொண்ட மருத்துவர் குழு, 6 மயக்க மருந்து நிபுணர்கள், 30 செவிலியர்கள் இணைந்து சிறுவனுக்கு அறுவை சிகிச்சை செய்துள்ளனர். இதற்கு 18 மணி நேரம் ஆகியுள்ளது. அறுவை சிகிச்சையின் இறுதியில், வெற்றிகரமாக புதிதாக கிட்னியும், ஈரலும் பொருத்தப்பட்டது. சிறுவன் புத்துயிர் பெற்றதை பார்த்து அவனது பெற்றோரும், உறவினர்களும் ஆனந்த கண்ணீர் வடித்தனர்.
சிகிச்சைக்காக, சிறுவனின் குடும்பத்தாருக்கு பாகிஸ்தான் அரசு நிதி உதவி செய்துள்ளது. அமர் ஆசிப்பின் தாத்தா முபாரக் ஹைதர் கூறுகையில், ஈரல் மற்றும் கிட்னி மாற்று அறுவை சிகிச்சை வசதி இந்தியாவைப்போல பாகிஸ்தான் மருத்துவமனைகளில் இருப்பதில்லை. எனவே உலகமெங்கும் உள்ள சிறந்த மருத்துவமனைகளை தேடியபோது, சிங்கப்பூர் அல்லது இந்தியாதான் இந்த சிகிச்சைக்கு ஏற்ற நாடு என்று தெரியவந்தது. சிங்கப்பூரை ஒப்பிட்டால் இந்தியாவில் செலவு குறைவு என்பதால் நாங்கள் இந்தியாவில் சிகிச்சையளிக்க முடிவு செய்தோம் என்றார்.
உனைசா கூறுகையில், பள்ளிக்குச் செல்வது, விளையாடுவது போன்ற சாதாரண வேலைகளில் ஈடுபட்டாலும்கூட அமர் ஆசிப் உடல் சோர்வடைந்துவிடும். வயிறு வலிப்பதாக கூறி அழுவான். சாதாரண பிரச்சினை என்று முதலில் நினைத்தோம். நிலைமை தீவிரமானதால், மருத்துவமனையில் காண்பித்தபோது, கிட்னி மற்றும் ஈரல் பாதிப்படைந்துள்ளதாக தெரியவந்தது என்றார்.












Click it and Unblock the Notifications