நாடு முழுவதும் கனமழை கொட்டோ கொட்டுன்னு கொட்ட போகுதாம்... இந்திய வானிலை மையம் எச்சரிக்கை!
அடுத்த 24 மணி நேரத்திற்கு நாடு முழுவதும் பல மாநிலங்களில் கனமழை பெய்யும் என இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது.
டெல்லி: அடுத்த 24 மணி நேரத்திற்கு நாடு முழுவதும் பல மாநிலங்களில் கனமழை பெய்யும் என இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது.
தென்மேற்கு பருவமழை நாடு முழுவதும் தீவிரமடைந்துள்ளது. வட மாநிலங்கள் மட்டுமின்றி தென் மாநிலங்களிலும் தென்மேற்கு பருவமழை வெளுத்து வருகிறது.
ஏற்கனவே கர்நாடகா, கேராள ஆகிய மாநிலங்களில் மழை கொட்டித் தீர்க்கிறது. இதன் காரணமாக அங்குள்ள அணைகள் மற்றும் நீர்நிலைகள் வேகமாக நிரம்பியுள்ளன.
கனமழைக்கு பலர் பலி
கேரளாவில் கடந்த ஒருமாதமாக பெய்யும் மழையால் பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. அம்மாநிலத்தில் கனமழைக்கு ஏராளமானோர் பலியாகியுள்ளனர்.
பல மாநிலங்களில் கனமழை
இந்நிலையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு இந்தியாவின் பல மாநிலங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது. ஒடிசா மற்றும் தெற்கு சட்டீஸ்கரில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனமழை எச்சரிக்கை
அருணாச்சல பிரதேசம், அசாம், மேகாலயா, நாகாலாந்து, மணிப்பூர், மிசோரம், திரிபுரா, மேற்குவங்கம், சிக்கிம், ஒடிசாவின் கடலோர பகுதிகள், உ.பி., அரியானா, சண்டிகர், டில்லி, பஞ்சாப், காஷ்மீர், கிழக்கு ராஜஸ்தான். குஜராத், கோவா, மத்திய மகாராஷ்டிரா மாநிலங்களில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்திலும் கனமழை
தமிழகம் மற்றும் ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் மலையோர பகுதிகளில் கன மழை கொட்டித் தீர்க்கும் என்றும் இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது.
கர்நாடகாவில் கனமழை தொடரும்
இதேபோல் கர்நாடகா மற்றும் கேரளாவின் கடலோர பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது. ஏற்கனவே கர்நாடகாவில் கனமழை பெய்து வருகிறது. இதனால் காவிரி ஆற்றில் விநாடிக்கு 81,038 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.