நாடு திரும்பிய செவிலியர்கள்- அனைவரும் குடும்பத்துடன் இணைந்த நெஞ்சை கரைய வைத்த தருணம்
கொச்சின்: ஈராக்கில் தீவிரவாதிகளிடம் சிக்கி தவித்த 46 செவிலியர்களும் இன்று தனிவிமானம் மூலமாக பத்திரமாக கொச்சின் விமான நிலையம் வந்தடைந்தனர். அங்கு அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஈராக்கில் கேரள மாநில நர்சுகள்தான் அதிகளவில் பணிபுரிந்து வந்தனர். தீவிரவாதிகள் பிடியில் சிக்கிய 46 பேரில் தூத்துக்குடியைச் சேர்ந்த மோனிஷாவை தவிர மீதி 45 பேரும் கேரளாவின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள்.
செவிலியர்களான திருவனந்தபுரத்தைச் சேர்ந்த சுருதி, வின்சி, பரீனா, சுந்தரா, இடுக்கி மாவட்டத்தைச் சேர்ந்த ஜென்சி, நீனு, பிந்தி, சாந்தி, ஷினுமோள், ரோஸ்லி, ஆன்சி, கண்ணூர் மாவட்டத்தைச் சேர்ந்த சந்தியா, ரம்யா, சவுமியா, ஷினு, சீனுமோள், பினு, பிந்தி, எர்ணாகுளம் மாவட்டத்தைச் சேர்ந்த சிமி, சுருதி, ரினு.
பத்தினம்திட்டா மாவட்டத்தைச் சேர்ந்த வித்யா, ரஷிதா, விஜு, லினு, திருச்சூர் மாவட்டத்தைச் சேர்ந்த டென்சி, காசர்கோடு மாவட்டத்தைச் சேர்ந்த சினிமோள், ஆலப்புழா மாவட்டத்தைச் சேர்ந்த கபில், கோழிக்கோட்டைச் சேர்ந்த ஷில்பி தூத்துக்குடி மோனிஷா உட்பட 46 பேரும் நண்பகல் 12 மணியளவில் கொச்சின் திரும்பினர்.
அவர்கள் அனைவரையும் கேரள முதல்வர் உம்மன் சாண்டி, அதிகாரிகள் மற்றும் குடும்பத்தினர் பூச்செண்டு கொடுத்து மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். ஈராக்கில் தவித்து வந்த அத்தனை செவிலிகளும் தங்களது குடும்பத்தினைரை கண்டு ஆனந்தக் கண்ணீர் வடித்த காட்சி அங்கு அனைவரது நெஞ்சத்தையும் உருக்குவதாய் அமைந்தது.