விமானங்களில் என்ஜின் கோளாறு: இண்டிகோ,கோ ஏர் விமான சேவைகள் ரத்து
தொடர் என்ஜின் கோளாறுகளின் காரணமாக இண்டிகோ, கோ ஏர் விமான சேவைகள் மார்ச் 31ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளன.
டெல்லி: இண்டிகோ மற்றும் கோ ஏர் விமான சேவை நிறுவனங்கள் இந்த மாதம் 31ம் தேதி வரை 626 விமானங்களை ரத்து செய்துள்ளதாக அந்த நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
இந்திய உள்நாட்டு விமான போக்குவரத்தில் இன்டிகோ மற்றும் கோ ஏர் ஆகிய தனியார்விமான நிறுவனங்கள் பெரும் பங்கு வகிக்கின்றன.

கடந்த சமீப நாட்களாக இண்டிகோ நிறுவனத்திற்குச் சொந்தமான விமானங்களின் என்ஜின்களில் அடிக்கடி கோளாறு ஏற்படுகிறது.
இதனால், விமானங்கள் நடுவானில் பறக்கும் போது பிரச்னை ஏற்பட்டு, அவை அவசர அவசரமாக தரையிறக்கப்படுகிறது. குறிப்பாக A320 நியோ ரக விமானங்களில் இந்த கோளாறு அடிக்கடி ஏற்படுகிறது.
இதனால் இந்த வகை விமானங்கள் பறப்பதற்கு அரசு தற்போது தடை விதித்துள்ளது. இதனைத்தொடர்ந்து இந்த வகை விமானங்களை அதிகமாக இயக்கும் இண்டிகோ மற்றும் கோ ஏர் விமான நிறுவனங்களின் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரமாக பல்வேறு விமான சேவைகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து மத்திய விமான போக்குவரத்து ஆணையம் எந்த முடிவும் எடுக்காததால், நாடு முழுவதும் வருகிற 31ம் தேதி வரை விமான சேவைகள் ரத்து செய்யப்படுவதாக இண்டிகோ நிறுவனம் அறிவித்துள்ளது.
இதுவரை இந்த இரண்டு நிறுவனங்களும் 626 விமானங்களை ரத்து செய்துள்ளன. இதில் இண்டிகோ நிறுவன விமானங்கள் மட்டும் 488 ஆகும், இதன்மூலம் 1200 விமானசேவைகள் பாதிக்கப்படுள்ளன. இண்டிகோ நிறுவனம் கடந்த 15ம் தேதி முதல் நாள் தோறும் 36 விமானங்களையும், கோ ஏர் நிறுவனம் தினமும் 26 விமானங்களையும் ரத்து செய்து வருகிறது.
முன்பதிவு செய்த பயணிகளுக்கு மாற்று விமானங்களில் பயணம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருப்பதாகவும், சிரமத்தை பொறுத்துக் கொள்ளுமாறும் இன்டிகோ விமான நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது.












Click it and Unblock the Notifications