உடும்புப்பிடி.. "கிருஷ்ணனையே" கல்யாணம் செய்த வக்கீல் பெண்.. கனவுல வந்து இவருக்கு மாலை போட்டாராம்..!
இளம்பெண் கிருஷ்ணர் சிலையை திருமணம் செய்துள்ள சம்பவம் இணையத்தில் பேசுபொருளாகி உள்ளது
கான்பூர்: உபியில் நடந்த ஒரு திருமண வைபவம், இணையத்தில் பேசுபொருளாகி வருகிறது.. இந்த திருமணத்தை கேள்விப்பட்ட இணையவாசிகள், இதுகுறித்து தங்கள் கருத்தையும் பதிவிட்டு வருகிறார்கள்.
சமீபகாலமாகவே, இளம்பெண்கள் பலர், தன்னை தானே திருமணம் செய்வதும், பிறகு உடனே விவாகரத்து செய்வதுமான பொழுதுபோக்கு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இப்படித்தான் கடந்த வருடமும், குஜராத் மாநிலத்தை சேர்ந்த ஷமா பிந்து என்ற இளம்பெண் ஒருவர் தன்னைத்தானே திருமணம் செய்து கொண்டிருந்தார்.

ஹனிமூன்
குடும்பத்தினர் அனைவரின் ஆதரவுடன் இந்த திருமணம் படுஜோராக நடைபெற்று இருந்தது. இதனைத் தொடர்ந்து திருமணம் முடிந்து தனியாக ஹனிமூனுக்கு ஷமா பிந்து சென்றிருந்த போட்டோக்கள் கூட இணையத்தில் அதிகம் பேசும் பொருளாக மாறி இருந்தன. இத்தகைய திருமணங்கள் எல்லாம் இணையத்தில் டிரெண்டாகியும் வருகிறது.. இந்நிலையில், இதுபோலவே, இன்னொரு வித்தியாசமான திருமண நிகழ்வும் இணையத்தில் 3வது நாளாக வலம் வந்து கொண்டிருக்கிறது.

கிருஷ்ணர் சிலை
உத்தரப்பிரதேசம் மாநிலம் ஒரையா பகுதியை சேர்ந்தவர் ரக்ஷா சோலான்கி.. 30 வயதாகிறது.. சட்டப்படிப்பு படித்து வருகிறார். இவர் சின்ன வயதில் இருந்தே, தன்னுடைய அப்பாவுடன், பிருந்தாவன் கிருஷ்ணன் கோயிலுக்கு அடிக்கடி செல்ல்வதை வழக்கமாக வைத்துள்ளார். அப்படி போகும்போது, கடவுள் கிருஷ்ணரை ரக்ஷாவுக்கு மிகவும் பிடித்து போய்விட்டது.. அதனால், கடந்த 2022-ம் ஆண்டு முதல், அவரையே தன் கணவராக கருதிக் கொண்டு வாழ்ந்து வந்துள்ளார்.. இந்நிலையில்தான், இவரின் குடும்பத்தார் மற்றும் உறவினர்கள் சூழ, 2 நாட்களுக்கு முன்பு ரக்ஷாவுக்கும், கிருஷ்ணர் சிலைக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது.

ஆசை ஆசை
இந்தத் திருமணம் குறித்து ரக்ஷாவின் அப்பா ரஞ்சித் சொல்லும்போது, "என் மகள் கிருஷ்ணரை கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்று முதலில் என்கிட்ட சொன்னபோது எனக்கு கொஞ்சம் அதிர்ச்சியாத்தான் இருந்தது. ஆனால் அவள் கடவுள் மீது கொண்டுள்ள பக்தியை பார்த்ததும், அவளது ஆசையை என்னால் புறக்கணிக்க முடியவில்லை.. அதனால் நாங்கள் மார்ச் 11-ம் தேதி குடும்பத்துடன் மதுராவுக்கு சென்று அங்கு அனைத்து திருமண சடங்குகளையும் செய்ய தொடங்கினோம். பிறகு அவள் விருப்பப்படி கிருஷ்ணரை திருமணமும் செய்து வைத்தோம்" என்கிறார்..

கனவில் மாலை
ரக்ஷாவின் கனவில் கிருஷ்ணர் அடிக்கடி வந்து கழுத்தில் மாலை அணிவிப்பாராம்.. அதன் பிறகே அவரை திருமணம் செய்து கொள்ளும் ஆசை அதிகமானதாக ரக்ஷா சொல்கிறார்.. வட மாநில திருமணங்களைப்போலவே, ரக்ஷாவும் தன் கையில் கிருஷ்ணர் சிலையை ஏந்தி அக்னியை சுற்றி வந்து கடவுளை திருமணம் செய்து கொண்டுள்ளார்.. அதாவது, வைணவ புராண கதைகளில் வரும் ஆண்டாளைப் போலவே கிருஷ்ணன் மீது பற்று கொண்ட ரக்ஷா அவரை திருமணம் செய்ய வேண்டும் என்று, கடந்த வருடமே தன் ஆசையை பெற்றோரிடம் சொல்லி உள்ளார்..

சந்தோஷம்
அவர்களும் இதற்கு மறுப்பு தெரிவிக்காமல் உடனே சம்மதம் தந்துள்ளார்கள்.. பெற்றோர் மற்றும் உறவினர் ஆகியோரின் ஏற்பாட்டின் பெயரில், உறவினர்களின் வீட்டில் வைத்து கிருஷ்ணரின் சிலைக்கு மாலை அணிந்து திருமணம் செய்து கொண்டுள்ளார் ரக்ஷா.. பின்னர், கிருஷ்ணர் சிலையுடன் தன்னுடைய அம்மா வீட்டிற்கும் ரக்ஷா திரும்பியிருக்கிறார்.. அனைவரும் பங்கேற்று, கடவுளின் பிரார்த்தனையுடன் இந்த திருமணம் நடந்தது என்கிறார் ரக்ஷா. ரக்ஷா நன்றாக படித்தவர்.. முதுகலை பட்டம் படித்துவிட்டு, சட்டப் படிப்புக்கான LLB படிப்பையும் படித்து வருகிறாராம்..












Click it and Unblock the Notifications