Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆயிரத்திற்கும் மேற்பட்ட அதிகாரிகள் அதிரடி டிரான்ஸ்பர்.. கொந்தளிப்பில் ஐபி!

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    மத்திய உளவுத்துறை அதிகாரிகள் டிரான்ஸ்ஃபர்- வீடியோ

    - ஆர். மணி

    சென்னை: ஆயிரத்துக்கும் மேற்பட்ட மத்திய உளவுத்துறை அதிகாரிகள் டிரான்ஸ்ஃபர் செய்யப்பட்டுள்ளதால், பெரும் கொந்தளிப்பில் ஐபி (IB) உள்ளது.

    இந்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் உளவுத் துறையில் (Intelligence Bureau or IB - தமிழில் சொன்னால் ஐபி) ஆயிரத்துக்கும் மேற்பட்ட அதிகாரிகள் திடீரென்று பணியிடை மாற்றம் (டிரான்ஸ்ஃபர்) செய்யப் பட்டுள்ளனர். நாடு விடுதலை அடைந்த இந்த 70 ஆண்டுகாலத்தில் இது போன்ற மிகப் பெரிய டிரான்ஸ்ஃபர் ஒரே நேரத்தில் செய்யப் பட்டதில்லை என்று ஓய்வு பெற்ற ஐபி அதிகாரிகள் கூறுகின்றனர்.

    இந்த டிரான்ஸ்ஃபர் பற்றி டில்லியில் கருத்து கூறிய ஐபி யில் தற்போது பணியாற்றும் சில மேலதிகாரிகள் இது வழக்கமான ஒன்றுதான் என்கின்றனர். ஆனால் இது கடைந்தெடுத்த பொய் .... இது முழுக்க, முழுக்க தற்போதய மத்திய ஆட்சியாளர்களின் கோபத்தின் வெளிப்பாடு தான் என்கிறார் உள்துறை அமைச்சகத்தில் நீண்ட காலம் பணியாற்றி, சில ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வு பெற்ற உயரதிகாரி ஒருவர். அப்படி என்னதான் கோபம் மத்திய அரசுக்கு?

    ஏன் இந்த திடீர் மாற்றம்

    ஏன் இந்த திடீர் மாற்றம்

    ‘'சமீபத்தில் நடந்து முடிந்த சில மாநில தேர்தல் முடிவுகள் தான் இதற்கு காரணம். குஜராத்தில் ஆட்சியை தக்க வைத்துக் கொண்டாலும், பாஜக வால் கடந்த தேர்தலை விட குறைவாகவே எம்எல்ஏக்களை தக்க வைத்துக் கொள்ள முடிந்திருக்கிறது'' என்கிறது தற்போது கொந்தளிப்பில் இருக்கும் ஐபி அதிகாரிகளிடம் வலம் வரும் ஒரு சுற்றறிக்கை. இதே போன்று வட கிழக்கு மாநிலங்களில் சில மாநிலங்களை பாஜக கைப்பற்றினாலும், மேகாலயா வில் பெரும்பான்மை பெற முடியாமல் போய் விட்டது. இதைப் போலவே உத்திரபிரதேசத்தில் கோரக்ப்பூர் உள்ளிட்ட இரண்டு மக்களவை இடைத் தேர்தல்களில் பாஜக தோற்றுப் போனதும் மற்றுமோர் முக்கிய காரணம். இந்த இரண்டு தொகுதிகளிலும் 2014 மக்களவைத் தேர்தல்களில் பாஜக தான் வென்றது. ‘இதில் கோரக்பூர் தோல்வி பாஜக வை வெறி கொள்ள வைத்திருக்கிறது. காரணம் கோரக்பூர் தொகுதியில் 2014 வரையில் தொடர்ந்து ஐந்து முறை வெற்றிப் பெற்றவர் பாஜக வின் யோகி ஆத்தியநாத். இவர்தான் தற்போது உத்திர பிரதேசத்தின் முதலமைச்சர்.

    கள நிலவர கணிப்பு

    கள நிலவர கணிப்பு

    இதே போன்று ஃபுல்பூர் எம்.பி. தொகுதியிலும் பாஜக தோற்றுப் போனது. இந்த தொகுதியில் இருந்துதான் பல முறை வென்றவர் பாஜக வின் கேஷவ் பிரசாத் மவுரியா. இவர் தற்போது உத்திர பிரதேசத்தின் துணை முதலமைச்சராக பதவியில் இருக்கிறார்'' என்றும் அந்த சுற்ற றிக்கை யில் கூறப்பட்டிருக்கிறது. இந்த தோல்விகளுக்கு எல்லாம் முக்கிய காரணம் சரியாக கள நிலவரத்தை மத்திய அரசுக்கு தெரிவிக்க ஐபி தவறியதுதான் என்று பாஜக தலைமை உறுதியாக நம்புகிறது. ‘'தங்களுடைய தோல்விகளுக்கு ஐபி தான் முக்கிய காரணம் என்று பாஜக தலைமை நம்புகிறது. மக்கள் பாஜக மீது கடும் அதிருப்தியில், கோபத்தில் இருக்கிறார்கள் என்று உரிய நேரத்தில் மோடி அரசுக்கு தெரிவிக்க ஐபி தவறி விட்டது என்று பாஜக நம்புகிறது. அதற்கு பழி வாங்கும் நடவடிக்கைதான் இந்த டிரான்ஸ்ஃபர்கள்'' என்று அந்த சுற்றறிக்கை கூறுகிறது.

    தெரிவிக்காதது ஏன்

    தெரிவிக்காதது ஏன்

    இந்த சுற்றறிக்கையின் மற்றுமோர் சுவாரஸ்யமான தகவல், பாஜக வின் தோல்விகளுக்கு ஐபி யில் பணியாற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளின் பங்கு. "ஐபி யில் பணியாற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் உண்மை நிலவரத்தை தங்களுடைய உயரதிகாரிகளுக்கு தெரிவிக்காமல், வேண்டும் என்றே தவறி விட்டனர். ஏனெனில் உயரிதிகாரிகள் மட்டுமல்ல நாட்டை ஆளும் பாஜக தலைமையும் தங்கள் மீது கோபம் கொள்ளும் என்பதுதான் காரணம். ஆனால் இதனால் தங்களுடைய தற்போதய சொகுசு வாழ்கையையும் (luxurious life) அவர்களே கெடுத்துக் கொண்டு விட்டார்கள் என்பதுதான் யதார்த்தம்''என்று மேலும் கூறுகிறது அந்த சுற்றறிக்கை.

    பாஜகவுக்கு கஷ்டம்

    பாஜகவுக்கு கஷ்டம்

    மத்திய அரசின் முடிவு பாஜகவுக்கு வினையாகவே முடியும் என்கிறார்கள் உளவுத்துறையில் பணியாற்றி பல ஆண்டுகளுக்கு முன்பே ஓய்வு பெற்றிருக்கும் சில அதிகாரிகள். "யாருடைய யோசனையின் பேரில் ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான ஐபி அதிகாரிகளை தற்போதய ஆட்சியாளர்கள் இப்படி பந்தாடுகிறார்கள் என்று எனக்குப் புரியவில்லை. ஒரு வாதத்துக்கு ஐபி செயற் பட வேண்டிய அளவுக்கு செயற்படவில்லை என்று ஆட்சியாளர்கள் கருதுவது நியாயமானது, உண்மையானது என்றே வைத்துக் கொள்ளுவோம். அதனை சீர் திருத்த வேண்டும், ஐபி யை மேலும் வலுவானதாக மாற்ற வேண்டும் என்று எண்ணுவதில் எந்த தவறும் இல்லை. ஆனால் இந்த பிரச்சனைக்கான தீர்வு பெரிய அளவிலான தற்போதய டிரான்ஸ்ஃபர்கள் கிடையாது. மாறாக குற்றங் குறைகளை துல்லியமாக ஆராய்ந்து அதற்கான தீர்வுகளை காண்பதுதான்'' என்கிறார் டில்லியில் இருக்கும் ஓய்வு பெற்ற உயரதிகாரி ஒருவர்.

    மொழி தெரியாமல் என்னத்த

    மொழி தெரியாமல் என்னத்த

    சென்னையில் இருந்து 10 ஐபி அதிகாரிகள் பெங்களூருக்கு மாற்றப் பட்டிருக்கிறார்கள். கர்நாடகாவில் இருந்து 10 ஐபி அதிகாரிகள் சென்னை வருகிறார்கள். சென்னையிலிருந்து பெங்களூருக்கு போகிறவர்களுக்கு சுத்தமாக கன்னட மொழி தெரியாது. இவர்கள் அனைவரும் களத்தில் பணியாற்றும் அதிகாரிகள். கான்ஸ்டபிள்கள் முதல் இன்ஸ்பெக்டர்கள் ரேங்க் வரையில் ஆனவர்கள். மொழி தெரியாமல் இவர்கள் பெங்களூருவில் அப்படி என்ன வரலாற்று சாதனையை நிகழ்த்தப் போகிறார்கள் என்பது அந்த ஆண்டவனுக்குத் தான் வெளிச்சம். இதே நிலைதான் கர்நாடாகாவில் இருந்து சென்னைக்கு வருபவர்களுக்கும்.

    போகாதது ஏன்

    போகாதது ஏன்

    மோடி அரசுக்கு பல விஷயங்களில், குறிப்பாக அரசியல் களத்தில் நிலவும் உண்மையான நிலவரம் பற்றிய துல்லியமான அறிக்கைகள் பல மாநிலங்களில் இருந்தும் போய் சேரவில்லை என்பது உண்மைதான் என்பதை தற்போது பணியில் உள்ள சில அதிகாரிகள் ஒப்புக் கொள்ளுகிறார்கள். ஆனால் அதற்கு காரணம் தாங்கள் இல்லை என்கின்றனர். "போதிய அதிகாரிகள் இல்லை. நவீன கருவிகள் இல்லை. பணிச் சுமை நாளுக்கு நாள் அதிகமாகிறது. பல முறை இந்த விஷயத்தை மேலே எடுத்துச் சென்றாலும் எந்த முன்னேற்றமும் இல்லை. ஐபி யில் பணியாற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளின் சொகுசு வாழ்க்கையை மேலும், மேலும் இன்னமும் சொகுசாக்க காட்டும் ஆர்வத்தில் பத்தில் ஒரு பங்கை எங்களைப் போன்ற களத்தில் பணியாற்றும் அதிகாரிகாரிகளிடம் காட்டினால் கூட போதும். எங்களால் அற்புதங்களை நிகழ்த்த முடியும். ஆனால் அடிப்படையான சில விஷயங்களுக்காகவே நாங்கள் போராட வேண்டியிருக்கிறது. ஆகவே எங்களை குறை சொல்லி என்ன மாற்றம் வந்து விடப் போகிறது'' என்கிறார் பெங்களூருவில் பணியாற்றும் ஐபி அதிகாரி ஒருவர்.

    மோடி அரசின் தவறு

    மோடி அரசின் தவறு

    எது எப்படியோ, பல துறைகளிலும் தவறுகளை இழைத்துக் கொண்டிருக்கும் மோடி அரசு, தற்போது உளவுத்துறையிலும் தவறுகளை இழைக்கத் துவங்கியிருக்கிறது. உளவுத்துறை என்பது யார் மத்தியில் ஆண்டாலும், அவர்களுக்கு அதாவது மத்திய ஆட்சியாளர்களுக்கு கண்களாகவும், காதுகளாகவும் இருந்து கொண்டிருக்கிறது. மத்திய உளவுத் துறையில் ஏற்படும் கொந்தளிப்பு பாரதூர மான விளைவுகளை கொண்டு வரும், அது தற்போதய ஆட்சியாளர்களுக்கு எதிராகவே நிலவரத்தை கொண்டு போகும் என்ற அடிப்படை அறிவும், புரிதலும் இல்லாமல் மோடி அரசு செயற்படுகிறது.

    புரட்டிப் போடுமா

    புரட்டிப் போடுமா

    இதன் விளைவுகளை பொறுத்திருந்து தான் நாம் பார்க்க வேண்டும். என்ன நடக்கும் என்று இப்போதே கணிக்க முடியாது. ஏனெனில் நாடு விடுதலை அடைந்த இந்த 70 ஆண்டுகளில் நடக்காத விஷயங்கள் பலவும் தற்போதய மோடி அரசில் நடந்து கொண்டிருக்கின்றன. அதன் ஓரங்கம் தான் இது என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் மற்ற விவகாரங்களை போல இது கிடையாது. இது மிகவும் முக்கியமான விவகாரம். நாட்டின் பாதுகாப்பையும், தலைவர்களின் பாதுகாப்பையும் மட்டுமல்லாமல் அவர்களது அரசியல் தலை விதியையும் புரட்டி போடும் விவகாரம் இது.

    புதிய புரட்சி

    புதிய புரட்சி

    மோடி அரசு வந்தவுடன் நடந்த, நடந்து கொண்டிருக்கும் ‘'பல புரட்சிகளில்'' ஒன்றாகவும் கூட இது இருக்கலாம். ஆனால் ‘'இந்த புரட்சிக்கு'' நாடு கொடுக்கப் போகிற விலை என்ன என்பதுதான் திருவாளர் பொதுஜனத்தின் கேள்வி. ஒன்றை மட்டும் உறுதியாக நம்பலாம். வழக்கமாக எந்த கேள்விக்கும் பதில் சொல்லாத மோடி, நிச்சயம் ‘'இந்த புரட்சிக்கும்'' பதில் சொல்ல மாட்டார் என்பதுதான் அது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+