சிவராத்திரி அன்று தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டம்: உளவுத்துறை எச்சரிக்கை
பஞ்சாப்: வருகிற 7 ஆம் தேதி சிவாராத்திரி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி பதன்கோட் உள்ளிட்ட ராணுவத் தளங்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
பஞ்சாப் மாநிலம் பதன்கோட் விமான படை தளத்தில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலை அடுத்து நாடு முழுவதும் உள்ள ராணுவ முகாம்கள் உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டன. இந்நிலையில் வருகிற 7 ஆம் தேதி நாடு முழுவதும் சிவராத்திரி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.

இதையொட்டி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் பதன்கோட் உள்ளிட்ட விமான படை தளங்கள் உள்ளிட்ட இடங்களில் ராணுவம் உஷார் படுத்தப்பட்டுள்ளது என பதன்கோட் மேற்கு பிராந்திய ராணுவ அதிகாரி தெரிவித்துள்ளார்.
மேலும் தற்போது நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடந்து வரும் வேளையில் அச்சுறுத்தலை ஏற்படுத்த தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம். எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இந்நிலையில் குஜராத் மாநிலம் காச்சென் மாவட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள ராணுவத் தளத்தின் அதிமுக்கிய பகுதிகளை ஒருவர் தனது செல்போனில் நேற்று இரவு புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ராணுவத்தினர் அவரைப் பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில் அவர் பூஜ் அருகே உள்ள நானா தினரா கிராமத்தைச் சேர்ந்த ஆயுப் கான் என்பதும், ராணுவத்தின் முக்கிய தளங்களை உளவு பார்த்து வந்ததும் தெரியவந்தது. அவரிடம் இருந்து ராணுவ பகுதிகளின் புகைப்படங்கள் அடங்கிய செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து ஆயுப் கான் மீது வழக்குப்பதிவு செய்த ராணுவ போலீசார், அவரை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications