சத்தீஸ்கர் எல்லையில் பயங்கர துப்பாக்கிச் சண்டை- மூத்த கமாண்டர் உட்பட 20 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை
ராய்ப்பூர்: சத்தீஸ்கர்- ஒடிஷா மாநிலங்களில் எல்லையில் சிறப்பு அதிரடிப்படையினர் நடத்திய அதிரடி தேடுதல் நடவடிக்கையில் 20 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். மாவோயிஸ்டுகளை தேடி அழிக்கும் நடவடிக்கை அப்பகுதியில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சத்தீஸ்கர்- ஒடிஷா எல்லையில் நுபாடா என்ற இடத்தில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் முகாமிட்டிருப்பதாக அதிரடிப்படையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து ஞாயிற்றுக்கிழமை முதல் அடர் வனப்பகுதியில் தீவிர தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்த தேடுதல் நடவடிக்கையில் நேற்று இரண்டு பெண் மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து நேற்று இரவு முதல் இன்று அதிகாலை அடர் வனப்பகுதியில் மாவோயிஸ்டுகளுக்கும் சத்தீஸ்கர்- ஒடிஷா மாநில அதிரடிப் படையினருக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச் சண்டை நிகழ்ந்தது. இந்த மோதலில் 14 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த 2 நாட்களாக நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையில் மொத்தம் 20 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டுள்ளனர்.
மேலும் அப்பகுதியில் பதுங்கி இருக்கும் மாவோயிஸ்டுகளை தேடி அழிக்கும் நடவடிக்கையில் சத்தீஸ்கர்- ஒடிஷா மாநில அதிரடிப் படை போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
சுட்டுக் கொல்லப்பட்ட முக்கிய கமாண்டர்
இந்த மோதலில் ஜெயராம் என்ற சலபதி என்ற மாவோயிஸ்டுகளின் முக்கிய கமாண்டர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இவரது தலைக்கு பாதுகாப்பு படையினர் ரூ1 கோடி பரிசுத் தொகை அறிவித்திருந்தனர்.
மாவோயிஸ்டுகளின் மறைவிடங்களில் இருந்து பெருமளவு ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
அமித்ஷா பாராட்டு
மாவோயிஸ்டுகளை அழித்த நடவடிக்கைக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பாராட்டுத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள மத்திய அமைச்சர் அமித்ஷா, நக்சலிசத்தை (மாவோயிஸ்டுகளை) இந்தியாவில் இருந்து வேரோடு அழிக்கும் நடவடிக்கையின் இறுதி நிலையில் இருக்கிறோம். நமது பாதுகாப்புப் படையினருக்கு மிகப் பெரிய வெற்றி கிடைத்துள்ளது. மாவோயிஸ்டுகள் இல்லாத பாரதத்தை உருவாக்குவோம் என தெரிவித்துள்ளார். மேலும் மாவோயிஸ்டுகள் இல்லாத இந்தியாவை உருவாக்க நமது பாதுகாப்புப் படையினர் இணைந்து போராடுகின்றனர். நக்சலிசம் ஒழியக் காத்திருக்கிறது எனவும் மத்திய அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications