அவர் எப்படி அப்படி பேசலாம்?: நடிகர் ஆமீர் கான் மீது இயக்குனர் போலீசில் புகார்
மும்பை: நாட்டில் சகிப்புத்தன்மை குறைந்து வருவது பற்றி பேசிய பாலிவுட் நடிகர் ஆமீர் கான் மீது இயக்குனர் உல்லாஸ் வழக்குப்பதிவு செய்துள்ளார். இந்நிலையில் ஆமீரின் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
நாட்டில் சகிப்புத்தன்மை இல்லை என்று கூறி எழுத்தாளர்கள், கலைஞர்கள் தங்களின் விருதுகளை திருப்பிக் கொடுத்து வருகிறார்கள். இந்நிலையில் பாலிவுட் நடிகர் ஆமீர் கான் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், நாட்டில் சகிப்புத்தன்மை இல்லாமை அதிகரித்து வருவதை பார்த்த என் மனைவி கிரண் ராவ் நாட்டை விட்டு வெளியேறிவிடலாமா என்று கூறினார் என்றார்.
ஆமீரின் இந்த பேச்சுக்கு கண்டனம் எழுந்துள்ளது. இந்நிலையில் குறும்பட இயக்குனர் உல்லாஸ் ஆமீர் கான் மீது செவ்வாய்க்கிழமை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இது குறித்து உல்லாஸ் கூறுகையில்,
நமக்கு என சில அடிப்படை கடமைகள் உள்ளன. அதில் ஒன்று நாட்டில் நல்லிணக்கத்தை காப்பது ஆகும். அப்படி இருக்கையில் பிரபலங்கள் இது போன்று கூறலாமா? அவர்கள் முதலில் எந்த சமூகத்தை பற்றி பேசுகிறார்கள், எங்கு மக்கள் அச்சத்துடன் வாழ்கிறார்கள் என்பதை கூற வேண்டும் என்றார்.
இந்நிலையில் ஆமீர் கானை கண்டித்து அவரது வீட்டுக்கு வெளியே பலரும் போராட்டம் நடத்துவதால் அங்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.