அவசர சட்டம் சாத்தியமா?- ஜல்லிக்கட்டு தடை குறித்து சட்ட நிபுணர்கள் விளக்கம்!
டெல்லி: தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளிக்க இயலாது என்று தடையை நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ள நிலையில் இதற்கு அவசரச் சட்டம் கொண்டுவர முடியுமா என்று சட்ட ஆலோசகர்கள் வழிமுறைகளைத் தெரிவித்துள்ளனர்.
தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டியை எதிர்த்து பிராணிகள் நல வாரியம் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இதையடுத்து ஜல்லிக்கட்டு நடத்த இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனால் ஜல்லிக்கட்டு ரசிகர்களும், மாடுபிடி வீரர்களும் அதிர்ச்சி அடைந்தனர். பாரம்பரிய விளையாட்டுக்கு தடை விதித்ததால் ஒட்டுமொத்த தமிழர்களும் வேதனை அடைந்துள்ளனர்.

அவசரச் சட்டம் மட்டுமே வழி:
இப்போதைய நிலையில் ஜல்லிக்கட்டு நடைபெற வேண்டுமானால் சுப்ரீம் கோர்ட்டில் இடைக்கால தடையை நீக்ககோரி உடனடியாக அப்பீல் செய்து அனுமதி பெற வேண்டும் அல்லது அவசர சட்டம் கொண்டு வந்து ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிக்க வேண்டும்.

குளறுபடிதான் காரணம்:
ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்து இருப்பதற்கு மத்திய அரசின் அரசாணையில் உள்ள குளறுபடியே காரணம் என்று சட்ட நிபுணர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.

காட்சிப்படுத்துதலுக்கு தடை:
பிராணிகள் வதைச்சட்டம் பிரிவு 3, 11 மற்றும் 22 இன்படி ஜல்லிக்கட்டுக்கு சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே தடை விதித்து உள்ளது. அதில் சட்டப்பிரிவு 3, 11 ஆகியவை பிராணிகள் வதை மற்றும் காயம் ஏற்படுத்துதல் ஆகியவற்றுக்கு தடை விதிக்கிறது. சட்டப்பிரிவு 22 என்பது பிராணிகளை காட்சிப்படுத்துதலுக்கு தடை விதிக்கிறது.

முழுமையாக இல்லை:
மத்திய அரசு பிறப்பித்த அரசாணையில் காட்சிப்படுத்துதல் சட்டப் பிரிவு 22க்கு மட்டும் விலக்கு அளித்தது. ஆனால் சட்டப்பிரிவு 3, 11 ஆகிய பிரிவுகள் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. இந்த நிலையில் பிராணிகள் வதைச்சட்டம் 3, 11 ஆகிய பிரிவுகளை வைத்து சுப்ரீம் கோர்ட்டில் தடை பெற்று விட்டன. எனவே மத்திய அரசு வெளியிட்ட அரசாணை முழுமையாக இல்லை. மேலும் அரசாணை மூலம் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை தடுக்க முடியாது. அவசர சட்டம் மூலம் மட்டுமே சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை கட்டுப்படுத்தலாம்.

அரசாணை வேஸ்ட்தான்:
இதன் காரணமாகத்தான மத்திய அரசு அவசர சட்டம் பிறப்பிக்க வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா மற்றும் அனைத்து தமிழக அரசியல் கட்சி தலைவர்களும் கோரிக்கை விடுத்தனர். ஆனால் மத்திய அரசு அரசாணை பிறப்பித்ததால் அதை எதிர்த்து கோர்ட்டுக்கு சென்று விட்டனர் என்று சட்ட நிபுணர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.

காளைகளுக்கு விலக்கு தேவை:
ஜல்லிக்கட்டு நடத்த வேண்டுமானால் பிராணிகள் வதை குறித்த சட்டப்பிரிவு 3, 11 ஆகியவற்றில் இருந்தும் காளைகளுக்கு விலக்கு அளிக்க வகை செய்ய வேண்டும். இதற்காக நாடாளுமன்றத்தில் புதிய சட்டம் இயற்ற வேண்டும். அல்லது அவசர சட்டம் பிறப்பித்து பின்னர் பாராளுமன்றத்தில் நிறைவேற்றலாம்.

வாய்ப்பு குறைவுதான்:
இதில் ஜல்லிக்கட்டுக்கு அங்கீகாரம் அளிக்கும் விதத்தில் புதிய பிரிவுகள் சேர்க்க வேண்டும். மத்திய அரசு அவசர சட்டம் கொண்டுவர அதிகாரம் உள்ளது. இதை எதிர்த்து வழக்கு தொடர்ந்தாலும் அதில் சுப்ரீம் கோர்ட்டு தடை விதிப்பது மிகவும் அரிதுதான். ஆனால் பொங்கலுக்கு இன்னும் 2 நாட்களே இருப்பதால் அவசர சட்டம் கொண்டு வர உடனடி சாத்தியம் இருப்பதாக தெரியவில்லை. இப்போதைக்கு வாய்ப்பு குறைவாகவே இருக்கிறது என்றும் சட்ட நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications