இந்தியாவில் இருந்து குஜராத் பிரிந்து போகிறதா? இந்தியாவின் ஒருபகுதி இல்லையா? சுப்ரீம் கோர்ட் சுளீர்
டெல்லி: தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தை செயல்படுத்தாத குஜராத், இந்தியாவின் ஒரு பகுதி இல்லையா? என உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் 2013-ம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. இந்த சட்டத்தின்படி வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ள மக்களுக்கு 5 கிலோ அரிசி, கோதுமை உள்ளிட்டவற்றை சலுகை விலையில் வழங்குவதை உறுதிப்படுத்துகிறது.
இதை உத்தரப்பிரதேசம், கர்நாடகா, மத்திய பிரதேசம், ஆந்திரா, தெலுங்கானா, குஜராத், ஒடிஷா, மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட், பீகார், ஹரியானா, சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்கள் செயல்படுத்தவில்லை என குற்றம்சாட்டி ஸ்வராஜ் அபியான் என்ற என்.ஜி.ஓ. சார்பாக மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் பொதுநலன் வழக்கை தொடர்ந்தார்.

மேலும் வறட்சியால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஒவ்வொரு நபருக்கும் மாதந்தோறும் வழங்கப்படும் 5 கிலோ உணவு தானியம் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு கூடுதல் தானியங்களும், சமையல் எண்ணெய்யும் வழங்கிட மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்; தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் வேலை உறுதி வழங்க வேண்டும் என்றும் பிரசாந்த் பூஷண் தொடர்ந்த பொதுநலன் வழக்கில் வலியுறுத்தப்பட்டிருந்தது.
அத்துடன் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு மதிய உணவு திட்டத்தின் கீழ் பால், முட்டை வழங்கப்பட வேண்டும். பயிர் இழப்பீடுக்கு உரிய நிவாரணம் வழங்கப்பட வேண்டும். கால்நடை தீவணங்களை மானிய விலையில் வழங்க வேண்டும். வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் தங்களது கடமையை நிறைவேற்றுவதில் மத்திய, மாநில அரசுகள் மெத்தனம் காட்டியதால் அம்மாநிலங்களில் மக்கள் வாழ்வாதாரம் பெரிதளவில் பாதிக்கப்பட்டுள்ளது. அரசின் மெத்தனத்தால் அரசியல் சாசனத்தில் சட்டப் பிரிவுகள் 21, 14-ன் கீழ் வழங்கப்பட்டுள்ள உரிமைகள் மீறப்பட்டுள்ளன எனவும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இவ்வழக்கின் விசாரணை உச்சநீதிமன்றத்தில் இன்று நீதிபதி மதன் பி. லோகூர் தலைமையிலான பெஞ்ச் முன்பு நடைபெற்றது.
அப்போது நீதிபதி மதன் பி. லோகூர் கூறியதாவது:
நாடாளுமன்றத்தில் உணவுப் பாதுகாப்பு சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால் குஜராத் உள்ளிட்ட மாநிலங்கள் இதை நடைமுறைப்படுத்தாதது ஏன்?
நாடாளுமன்றம் என்ன செய்து கொண்டிருக்கிறது? குஜராத் இந்தியாவின் ஒரு பகுதி இல்லையா? இந்தியாவில் இருந்து பிரிந்து செல்லப் போகிறதா குஜராத்?
உணவுப் பாதுகாப்பு சட்டம் இந்தியா முழுவதுக்கும் பொருந்தும்தான். குஜராத் போன்ற மாநிலங்கள் இதனை நடைமுறைப்படுத்தவில்லை. இதையே காரணமாக கூறி மற்ற சட்டங்களை நடைமுறைப்படுத்த முடியாது என்று பலரும் சொல்லவும் முடியும் அல்லவா?
வேறு ஏதாவது ஒரு மாநிலத்தில் கிரிமினல் தண்டனைச் சட்டம், இந்தியன் பீனல் கோட், எவிடன்ஸ் சட்டம் என ஏதாவது ஒன்று இதேபோல் அமல்படுத்தப்படாமல் போகலாம்.
வறட்சி பாதித்துள்ள மாநிலங்களாக மனுதாரர் குறிப்பிட்டிருக்கும் மாநிலங்களில் தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம், தேசிய உணவு பாதுகாப்பு மசோதா, மதிய உணவு திட்டம் போன்றவை எவ்வாறு செயல்படுகின்றன என்ற தகவல்களை ஒருங்கிணைத்து வரும் 10-ந் தேதிக்குள் மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்.
இவ்வாறு நீதிபதி மதன் பி லோகூர் கூறினார்.












Click it and Unblock the Notifications