மனைவி உடல்நலம் சரியில்லை என பொய்- சர்ச்சையில் சஞ்சய் தத் 'பரோல்' !!
மும்பை: மனைவிக்கு உடல்நலம் சரியில்லை என்று பொய் சொல்லி இந்தி நடிகர் சஞ்சய் தத்துக்கு பரோல் வழங்கப்பட்டுள்ளதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் 5 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்ட நடிகர் சஞ்சய்தத் புனே எரவாடா சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார். கடந்த அக்டோபர் மாதம் 1-ந்தேதி அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் மருத்துவ பரிசோதனைக்காக 2 வாரம் பரோலில் விடுதலை செய்யப்பட்டார். பின்னர் பரோல் மேலும் 2 வாரங்கள் அனுமதிக்கப்பட்டது.
அதன் பிறகு அக்டோபர் 30-ந்தேதி சிறைக்கு திரும்பினார். இதற்கிடையே சஞ்சய் தத்தின் மனைவி மான்ய மதாவுக்கு கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் மனைவியை பார்ப்பதற்கும், அருகில் இருந்து கவனிப்பதற்கும் ஒருமாதம் பரோல் கேட்டு மாவட்ட ஆட்சியருக்கு சஞ்சய் தத் விண்ணப்பம் செய்து இருந்தார்.
அதை ஏற்று அவர் சிறை அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்துள்ளார். இதனால் சஞ்சய் தத்துக்கு ஒரு மாதம் பரோலுக்கு அனுமதிக்கப்பட்டது.
பார்ட்டியில் மனைவி
ஆனால் சஞ்சய்தத் மனைவி, கடந்த வியாழன்று கூட இரவு பார்ட்டி ஒன்றில் கலந்து கொண்ட வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி இருக்கின்றன. அத்துடன் அவர் நலமுடன் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருக்கும் காட்சிகளும் வெளியாகின.
இதனால் நலமுடன் இருக்கும் மனைவிக்கு உடல்நிலை சரியில்லை என பொய் சொல்லி சஞ்சய் தத் பரோலில் செல்வதாக குற்றம்சாட்டப்பட்டது. இதனால் சஞ்சய் தத்துக்கு பரோல் தரக்கூடாது என்பதை வலியுறுத்து எரவாடா சிறை முன்பு இந்திய குடியரசுக் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.