நிழலுலக தாதாக்கள் ஏன் லலித் மோடியை குறி வைத்தனர்? ஆபத்து இன்னும் தொடர்கிறதா?
மும்பை: 2010 மே மாதம், ஐபிஎல் மாஜி தலைவரான, லலித் மோடி இந்தியாவை விட்டு வெளியேறினார். அதற்கு அவர் கூறிய காரணம், நிழலுலக தாதாக்களால் தனது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது என்பதாகும். இதை காரணமாக கூறியே, இந்திய அமலாக்கபிரிவிடம் லலித் மோடி இதுவரை ஆஜராகவில்லை.
அதேநேரம், பாதுகாப்பு ஏஜென்சி வட்டாரங்களோ, 2010க்கு பிறகு லலித் மோடிக்கு எந்தவித மிரட்டலும் இல்லை என்று கூறுகின்றன. 2009 ஏப்ரலில் மகாராஷ்டிரா உளவுத்துறை மும்பை போலீசாருக்கு ஒரு அறிக்கை அனுப்பியது. அதில் லலித் மோடி மற்றும் அவரது குடும்பத்தாருக்கு தாதா சோட்டா சகீல் கும்பலால் ஆபத்து ஏற்படலாம் என்று எச்சரிக்கப்பட்டது.

ஓராண்டு கழித்து, அந்த அறிக்கை மறு ஆய்வு செய்யப்பட்டது. அப்போது முதல் இப்போதுவரை உளவுத்துறை எந்த எச்சரிக்கையும் தரவில்லை. லலித் மோடி குடும்பத்தாருக்கு அளித்து வந்த பாதுகாப்பும் 2010 செப்டம்பருக்கு பிறகு திரும்ப பெறப்பட்டது.
அதன்பிறகு லலித் மோடிக்கு அச்சுறுத்தல் இருப்பதாக எந்த புலனாய்வு ஏஜென்சியும் இதுவரை எச்சரிக்கவில்லை. ஆனால், "கொச்சி ஐபிஎல் அணி வாங்கப்பட்டதில் நடந்த முறைகேட்டை அம்பலப்படுத்தியதால்தான், முன்னாள் மத்திய அமைச்சர் சசிதரூர் மற்றும் ஐபிஎல் சூதாட்டத்தில் தொடர்புள்ள நிழலுலக தாதாக்களால் தனக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது" என்று லலித் மோடி கூறிவந்தார். ஐரோப்பாவில் உள்ள லலித் மோடி இப்போதும், இஸ்ரேல் நாட்டு பாதுகாப்பு ஏஜென்சி ஒன்றின் பாதுகாப்பின்கீழ் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications