ஐ.எஸ்.ஐ.எஸ். தாக்குதல்கள் இனப்படுகொலைகளை விட கொடூரமானது: முஸ்லிம் அறிவுஜீவிகள் கடும் கண்டனம்
டெல்லி: ஈராக்கில் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தினர் நடத்தி வரும் தாக்குதல்கள் இனப்படுகொலைகளை விட கொடூரமானது என்று முஸ்லிம் அறிவுஜீவிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ஈராக் மற்றும் சிரியாவில் பல நகரங்களைக் கைப்பற்றி இஸ்லாமிய தேசம் என்ற தனிநாட்டை பிரகடனப்படுத்தியுள்ளது ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கம். அதன் பின்னர் பிற மதத்தவர் கட்டாயம் மதம் மாற வேண்டும் என்று நிர்பந்தித்து வருகிறது ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கம்.
அப்படி மதம் மாற மறுப்பவர்களை சுட்டுப் படுகொலை செய்து வருகிறது ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கம். இந்த படுகொலைகளை ஷப்னம் ஹாஷ்மி, நவைத் ஹமீத், ஜான் தயாள் உள்ளிட்ட முஸ்லிம் அறிவுஜீவிகள் மிகக் கடுமையாக கண்டித்துள்ளனர்.

இது தொடர்பாக முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த பேராசியர்கள், ஆய்வாளர்கள், சமூக ஆர்வலர்கள் ஆகியோர் வெளியிட்டுள்ள கூட்டறிக்கை:
அமெரிக்கா, சவுதி அரேபியா, குவைத் ஆகிய நாடுகள் சிரியாவிலும் ஈராக்கிலும் எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றி மகிழ்கின்றன.
ஐ.எஸ்.ஐ.எஸ்.-இன் செயல்பாடுகள் இனப்படுகொலைகளை விட மோசமானது. இஸ்லாத்தின் போதனைகளுக்கு எதிரான இத்தகைய செயல்பாடுகளை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்.
கிறிஸ்துவர்கள், ஷியா முஸ்லிம்கள், குர்திஷ் மக்கள், யாஸிதிகள் மற்றும் பிற சிறுபான்மையினர் மீது ஐ.எஸ்.ஐ.எஸ் நடத்தும் தாக்குதல்கள் காட்டுமிராண்டித் தனமானவை.
இவர்களின் வன்முறையினால் நிலம், வீடு, கால்நடைகள், சொந்தபந்தங்களை இழந்து வாடும் ஈராக்கியர்களுக்கு எங்களது இதயங்கனிந்த ஆறுதல்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
இஸ்லாமின் பெயரால் அவர்கள் சிறுபான்மையினர் மீது மட்டுமல்ல, தங்கள் கொள்கைகளை எதிர்க்கும் ஒவ்வொருவர் மீதும் அராஜகங்களை பிரயோகப்படுத்துகின்றனர். இஸ்லாமிய போதனைகளை மறந்து தவறான விளக்கங்களின் அடிப்படையில் தொடுக்கப்படும் வன்முறைகள் ஏற்கத்தக்கதல்ல.
இஸ்லாமிய போதனைகளின் படி வயதானோர், குழந்தைகள், பெண்கள் ஆகியோர் மதிக்கப்படவேண்டும், ஆனால் இவர்களை ஐ.எஸ்.ஐ.எஸ். இஸ்லாமியத்தின் பெயரால் கொலை செய்து வருகிறது.
இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications