ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு ஆதரவு.. 24 மணி நேரத்தில் அடுத்தடுத்து கர்நாடகாவில் 6 பேர் கைது
பெங்களூர்: 24 மணி நேர இடைவெளியில், ஐஎஸ்ஐஎஸ் ஆதரவாளர்கள் 6 பேர் கர்நாடகாவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பெங்களூர் நகரின் சர்ஜாப்பூர் ரோடு, ஜக்கசந்திரா மற்றும் பிரேசர் டவுன் ஆகிய பகுதிகளில் 4 பேரும், மங்களூர் மற்றும் தும்கூர் ஆகிய நகரங்களில் தலா 1வர் என மொத்தம் 6 பேரை தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் நேற்று இரவு முதல் இன்று மதியம்வரை நடத்திய தேடுதல் வேட்டையில் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர்களிடமிருந்து லேப்டாப், செல்போன், பென்டிரைவ் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவர்கள் பெங்களூர்-மடிவாளா பகுதியிலுள்ள தடயவியல் ஆய்வகத்தில் வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். மேலும், உடல் நல பரிசோதனை அவர்களுக்கு நடத்தப்பட்டது.
குடியரசு தினம் நெருங்கும் நிலையில், சிறப்பு விருந்தினராக வருகை தர உள்ள பிரான்ஸ் அதிபரை குறிவைத்து தாக்குதல்கள் நடைபெற உள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கைவிடுத்திருந்தது. எனவே, ஐஎஸ்ஐஎஸ், அல்கொய்தா தீவிரவாதிகளுடன் தொடர்பிலுள்ள நபர்களை உளவுத்துறை, தேசிய புலனாய்வு துறை, காவல்துறையினர் கண்காணித்து வந்தனர். அதன் ஒருபகுதியாக இந்த கைது நடவடிக்கை நடந்துள்ளது.