மோடி, பாரிக்கரைக் கொல்லப் போவதாக கடிதம் மூலம் ஐஎஸ்ஐஎஸ் மிரட்டல்!
பனாஜி: பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் ஆகியோரை கொலை செய்யப்போவதாக ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் கடிதம் மூலம் மிரட்டல் விடுத்துள்ளனர் என கோவா போலீசார் தெரிவித்துள்ளனர்.
கோவா மாநில தலைமைச் செயலகத்திற்கு கடந்த வாரம் கடிதம் ஒன்று வந்துள்ளது. அதை பிரித்து படித்தபோது அதில் பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் ஆகியோரை கொலை செய்யப் போவதாகக் கூறி ஐஎஎஸ்ஐஎஸ் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவா போலீசார் இந்த கடிதத்தை நகல்கள் எடுத்து மாநிலத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கும் அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இந்த வழக்கை தீவிரவாத தடுப்பு பிரிவிடம் ஒப்படைத்துள்ளனர்.
கடிதம் வந்து ஒரு வாரம் ஆகிய போதிலும் அது குறித்து போலீசார் இன்று தான் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து மூத்த போலீஸ் அதிகாரி கூறுகையில்,
மிரட்டல் கடிதம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அதை யார் அனுப்பியது என்பதை விரைவில் கண்டுபிடித்துவிடுவோம். கடிதத்தின் கீழ் பகுதியில் ஐஎஸ்ஐஎஸ் என்று குறிப்பிடப்பட்டிருந்தது என்றார்.
அந்த கடிதத்தில் மாட்டிறைச்சி மீதான தடைக்கு எதிர்ப்பும் தெரிவிக்கப்பட்டுள்ளது.