கேம் சேஞ்சராகும் 'அக்னிகுல்'.. விரைவில் விண்ணில் பாய்கிறது தனியார் ராக்கெட்! தேதி குறித்த இஸ்ரோ!
சென்னை: விண்வெளி துறையில் 100 சதவிகித அந்திய முதலீட்டை மத்திய அரசு சமீபத்தில் அனுமதித்திருந்தது. இந்நிலையில், இந்த மாதத்திலேயே தனியார் நிறுவனத்தின் ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து ஏவப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
சர்வேதேச விண்வெளித்துறையில், இந்தியா தவிர்க்க முடியாத இடத்தை பிடித்திருக்கிறது. நிலவின் தென் துருவத்தில் தரையிறக்கப்பட்ட சந்திரயான் 3 விண்கலம், சர்வதேச நாடுகளின் கவனத்தை இந்தியாவின் பக்கம் திருப்பியது. அதேபோல, இதனை தொடர்ந்து சூரியனை ஆய்வு செய்ய ஏவப்பட்ட ஆதித்யா எல்1 விண்கலம், கருந்துளையை ஆய்வு செய்ய ஏவப்பட்ட எக்ஸ்போசாட் விண்கலம் ஆகியவை இந்தியாவுக்கு விண்வெளி துறையின் மீது இருக்கும் ஆர்வத்தை வெளிப்படுத்தியது.

இதற்கிடையில்தான் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, விண்வெளி துறையில் 100 சதவிகித அந்நிய முதலீட்டுக்கு அனுமதியளித்தது. இதனையடுத்து விரைவில் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து தனியார் நிறுவனத்தின் ராக்கெட் விண்ணில் ஏவப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், அக்னிகுல் எனும் தனியார் நிறுவனத்தின் ராக்கெட் விண்ணில் ஏவ இஸ்ரோ அனுமதியளித்துள்ளது. இந்த ராக்கெட் இந்த மாதமே விண்ணில் ஏவப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
அக்னிகுல் ராக்கெட், பூமியிலிருந்து சுமார் 700 கி.மீ உயரத்தில், 100 கி.கி எடை கொண்ட செயற்கைக்கோளை கொண்டு சென்று நிலை நிறுத்தும். அக்னிகுல் ராக்கெட்டுக்கு முன்னரே கடந்த 2022ம் ஆண்டு ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் என்கிற நிறுவனம் விக்ரம் என்கிற ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவியிருந்தது. இந்தியாவிலிருந்து விண்வெளிக்கு பறந்த முதல் தனியார் ராக்கெட் இதுதான். இதன் மூலம் தனியார் ராக்கெட்டுகள் விண்ணில் பறக்க முடியும் என்பது நிரூபணமானது.
ஆனால், இந்த முறை ஏவப்படும் தங்களின் ராக்கெட், ஸ்கைரூட் போல அல்லாமல் பிஎஸ்எல்வி ராக்கெட் லாஞ்சை போல இருக்கும் என அக்னிகுல் நிறுவனம் தெரிவித்திருக்கிறது. இந்நிறுவனம் கடந்த 2020ம் ஆண்டு இஸ்ரோவிடம் ராக்கெட் ஏவுவது குறித்த ஒப்பந்தத்தை போட்டிருந்தது. அக்னிகுல் ஸ்பேஸ் நிறுவனம், ஸ்டார்ட் அப் நிறுவனமாக இருந்தாலும், விண்வெளி துறையை காலணிப்படுத்துவதில் அதிக முனைப்பு காட்டி வருகிறது. இந்நிறுவனத்தின் ராக்கெட் வரும் 22ம் தேதி விண்ணில் ஏவப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications