சுத்தி வரும் 13 "கண்கள்".. ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது.. "பிக் பாஸ்" இந்தியா!
டெல்லி: இந்தியா ஆசியாவின் முக்கியமான "பிக் பாஸ்" ஆகி வருகிறது. தனது எதிரிகளை கூர்ந்து கண்காணிக்க அது ஏவியுள்ள 13 செயற்கைக் கோள்கள் ஓய்வின்றி துல்லியமாக உழைத்து வருகின்றன. இதனால் இந்தியாவால் தனது எதிரிகளை முன்பை விட தற்போது துல்லியமாக கண்காணிக்க முடிகிறதாம்.
நிலம் மற்றும் நீர் வழியாக எதிரிகள் ஊடுறுவி விடாத வகையில் தற்போது தனது கண்காணிப்பை செயற்கைக் கோள்கள் மூலமாக முடுக்கி விட்டுள்ளது. இந்த 13 செயற்கைக் கோள்களும் இந்தியாவின் நீர் மற்றும் நில வழி ஊடுறுவல்களை துல்லியமாக காட்டிக் கொடுத்து விடுகிறதாம்.
இந்தியா கடந்த வெள்ளிக்கிழமை ஏவிய காட்ரோடாச் 2இ+ செயற்கைக்கோளையும் சேர்த்து தற்போது இந்தியாவின் கண்காணிப்பு செயற்கைக் கோள்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளதாக இஸ்ரோ தகவல் தெரிவிக்கிறது.
எதிரிகளைக் கண்காணிக்க
இந்த 13 செயற்கைக் கோள்களையும் இந்திய பாதுகாப்புப் படையினருக்காக பிரத்யேகமாக இஸ்ரோ பயன்படுத்துகிறது. எல்லைப் புறத்தில் எதிரிகளின் நடமாட்டம், எதிரிகளின் ஊடுறுவலை இது காட்டிக்கொடுத்து விடும்.
துல்லியமான "எக்ஸ்ரே"
புவியின் சுற்றுப் பாதைக்கு அருகில் இந்த செயற்கைக் கோள்களில் பல நிலை நிறுத்தப்பட்டுள்ளன. எனவே பூமியை மிகத் துல்லியமாக ஸ்கேன் செய்யக் கூடிய திறன் இவற்றுக்கு உள்ளது. பூமியிலிருந்து குறைந்தது 200 கிலோமீட்டர் முதல் அதிகபட்சம் 1200 கிலோமீட்டர் மேல் இந்த செயற்கைக் கோள்கள் நிலை நிறுத்தப்பட்டுள்ளன.
செம சாட்டிலைட்
அதிலும் கார்டோசாட் 2 செயற்கைக் கோளானது துல்லியமாக படங்களை எடுத்து அனுப்பும் வகையில் அதி நவீனமானதாக அமைந்துள்ளது சிறப்பானது. குறிப்பிட்ட இடத்தில் உள்ள நடமாட்டத்தை துல்லியாக அது படம் எடுத்து அனுப்பும். தற்போது இந்தியா பயன்படுத்தி வரும் இந்த செயற்கைக் கோள்களில் முக்கியமானவை கார்டோசாட் 1, 2 தொடர்கள் மற்றும் ரிசாட் 1, ரிசாட் 2+ ஆகியவை முக்கியமானவை.
அது மட்டும் இல்லை
வளர்ந்த நாடுகளுக்கு இணையான துல்லியமான வான்வழிப் பாதுகாப்பை நாம் உறுதி செய்துள்ள போதிலும் அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளிடம் உள்ள ஒரு முக்கியமான அம்சம் மட்டும் நம்மிடம் பயன்பாட்டில் இல்லை. அது செயற்கைக் கோளைத் தாக்கி அழிக்கும் ஆயுதம். அந்த வசதி நம்மிடம் இருக்கிறது. அதேசமயம், அதைப் பயன்படுத்தும் திட்டம் நம்மிடம் இல்லையாம்.