ஜம்மு காஷ்மீர் சட்டசபைத் தேர்தல்: யாருக்கு, என்ன கிடைக்கலாம்.. ?
அனைத்துத் தேர்தல்களின் தாய் என்று இதைச் சொல்லலாம். ஜம்மு காஷ்மீர் தேர்தல் அனைவராலும் கூர்ந்து கவனிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக பாஜக இதில் பெறப் போகும் பலன்கள் குறித்து எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. இது நிச்சயம் மிகப் பெரிய தேர்தல்தான். அதேசமயம், ஜார்க்கண்ட்டில் நடைபெறப் போகும் தேர்தலையும் நாம் மறந்து விடக் கூடாது.
இந்தத் தேர்தல்கள் மூலம் யார் யாருக்கு என்ன பலன் கிடைக்கும்.. இதுகுறித்து பிரபல தேர்தலியல் நிபுணர் டாக்டர் சந்தீப் சாஸ்திரியுடன் கேட்டோம். ஜம்மு காஷ்மீர், ஜார்க்ண்ட், டெல்லி ஆகிய மாநில தேர்தல்களில் யாருக்கு என்ன கிடைக்கலாம் என்பது குறித்து அவர் விளக்கியது....
முதலில் ஜம்மு காஷ்மீர் குறித்துப் பார்ப்போம்.

ஜம்மு காஷ்மீர்:
கடந்த ஒரு ஆண்டு நிலவரத்தைப் பார்த்தால், சில விஷயங்கள் நமது மனதில் தோன்றும். வாக்காளர்கள் எப்போதுமே செயல்படாத அரசுக்கு எதிராகவே வாக்களிப்பது வழக்கம்.
ஜம்மு காஷ்மீர் அரசும் கூட பெருமையுடன் கூடிய அரசாக இல்லை. மக்கள் மத்தியில் உமர் அப்துல்லா மீது பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அவர் பதவிக்கு வந்த பின்னர் மக்களின் எதிர்பார்ப்புநமுத்துப் போனது.
மேலும் உமர் அப்துல்லாவே கூட நம்பிக்கையில்லாதவராக இருக்கிறார். தனது தொகுதியை அவர் மாற்றினார். மேலும் கட்சியிலிருந்து பலர் விலகிச் சென்றனர். அவரது தந்தைக்கு இருந்த கவர்ச்சிகரமான பெயர் கூட உமர் அப்துல்லாவுக்கு இல்லை. அவர் வரும் தேர்தலில் பெரும் சிரமங்களைச் சந்திக்க நேரிடும் என்பதில் சந்தேகம் இல்லை.
பாஜகவின் போராட்டம்:
உமர் அப்துல்லா மீதான அதிருப்தி, மக்கள் ஜனநாயகக் கட்சிக்கு காஷ்மீரைத் தாண்டி செல்வாக்கு இல்லாதது ஆகியவை காரணமாக இந்தத் தேர்தலில் பாஜக பெருமளவிலான லாபங்களைப் பெற வாய்பபு ஏற்பட்டுள்ளது. மேலும் காஷ்மீரிலும் கூட அது தனது செல்வாக்கை விஸ்தரிக்கும் வாய்ப்புகளும் மறுப்பதற்கில்லை. தற்போதைய நிலையை தனக்கு சாதகமாக திருப்ப பாஜக ஆர்வமாக உள்ளது.
ஆனால் நிச்சயம் ஜம்மு காஷ்மீரில் யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்காது என்றே நான் கருதுகிறேன். இருப்பினும் மற்ற தேர்தல்களை விட இந்த தேர்தலில் பாஜக சிறப்பாக செயல்படும் வாய்ப்புகள் உள்ளன. மேலும் ஆட்சியமைப்பதில் பாஜக முக்கியத்துவம் வகிக்கும் என்றும் தெரிகிறது.
பாஜக வென்றால்:
பாஜக இந்தத் தேர்தலில் வென்றால் அது பல விளைவுகளை ஏற்படுத்தும். ஜம்மு காஷ்மீரில் பாஜக வென்றால், சர்வதேச அளவில் நல்ல பெயர் எடுத்து வரும் பிரதமர் நரேந்திர மோடிக்கு பெரும் வெற்றி கிடைத்ததாக தோற்றம் ஏற்படும்.அவரது ராஜதந்திரம் வென்றதாக பாராட்டப்படுவார்.
இருப்பினும் சுய பலத்துடன் பாஜக ஆட்சியை அமைக்கும் என்று நான் கருதவில்லை. பள்ளத்தாக்குப் பகுதியில் யாருக்கு அதிக சீட் கிடைக்கும் என்பதைப் பார்க்க வேண்டும். இருப்பினும் ஜம்மு பிராந்தியத்தில் பாஜக பெரும் வெற்றி பெரும் வாய்ப்புகள் உள்ளன. அதேசமயம், பள்ளத்தாக்குப் பகுதியில் பாஜக நிறுத்தப் போகும் முஸ்லீம் வேட்பாளர்களால் மக்கள் ஜனநாயக்க கட்சிக்கும், தேசிய மாநாட்டுக் கட்சிக்கும் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.
கூட்டணியும், காங்கிரஸும்:
காங்கிரஸைப் பொறுத்தவரை அவர்கள் இன்னும் லோக்சபா அடியிலிருந்தே இன்னும் மீளவில்லை. அடுத்தடுத்து பல மாநிலங்களில் ஆட்சியைப் பறி கொடுத்துள்ளனர். நிலைமை மோசமாகத்தான் உள்ளது.
கடந்த காலத்தில் தேசிய மாநாட்டுக் கட்சியும், மக்கள் ஜனநாயகக் கட்சியும் காங்கிரஸுடன் கூட்டணி அமைத்திருந்தன. சீட் கொடுக்கும் கட்சியாகத்தான் காங்கிரஸ் இதுவரை இருந்துள்ளது. ஆனால் தற்போது அந்த நிலை மாறலாம். பாஜக பெரும் பாதிப்பை காங்கிரஸுக்கும், கூட்டணிக்கும் ஏற்படுத்தலாம்.












Click it and Unblock the Notifications