ராணுவ தளபதி நியமன உத்தரவுதான் மன்மோகன் சிங் கையெழுத்திட்ட கடைசி 'பைல்'
டெல்லி: நாட்டின் புதிய ராணுவ தளபதி நியமன உத்தரவுக்கான கோப்பில் கையெழுத்திட்டதுதான் பிரதமர் பதவியில் மன்மோகன்சிங் கையெழுத்திட்ட கடைசி கோப்பு.
கடந்த 10 ஆண்டுகளாக பிரதமர் பதவியில் உள்ள மன்மோகன் சிங், பிரதமர் அலுவலகத்தில் அமர்ந்து பணியாற்றுவது இன்றுடன் முடிவுக்கு வருகிறது. இன்று காலை சவுத்பிளாக் அலுவலகத்துக்கு வந்த பிரதமர் மன்மோகன்சிங் வழக்கமான பணிகளில் ஈடுபட்டார்.
இதையடுத்து மிக முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டு அவர் தன் கடமைகளை நிறைவு செய்தார். பின்னர் பிரதமர் அலுவலக பணியாளர்களிடம் விடை பெற்றுக் கொண்டார் மன்மோகன்சிங்.
புதிய ராணுவ தளபதி நியமன உத்தரவில் கையெழுத்திட்டதுதான் அவர் பார்த்து கையெழுத்திட்ட கடைசி கோப்பு என்று கூறப்படுகிறது. பிரதமர் அலுவலக பணிகள் இன்று முடிந்தாலும் அவர் 4 நாட்களுக்கு பிரதமர் பதவியில் நீடிப்பார். வரும் 17-ந்தேதி அவர் ராஜினாமா கடிதத்தை கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.