பொருளாதாரத்தில் மோடி "அப்பா"ன்னா.. மன்மோகன் சிங் "பெரியப்பா".. நாடாளுமன்றத்தைக் கலக்கிய "சிங்"கம்!
பொருளாதாரத்தில் பிரதமர் மோடி அப்பா என்றால் தான் பெரியப்பா என்பதை முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் நிரூபித்து விட்டதாக காங்கிரஸார் பெருமை பொங்கப் பேசி வருகின்றனர்.
டெல்லி: சில நாட்களுக்கு முன்பு பாஜக எம்.பி. பபுல் சுப்ரியோ ராஜ்யசபாவில் பேசும்போது பிரதமர் மோடியை தந்தை என்று கூறி பேசினார். மகன்கள் (பாஜக எம்.பிக்கள்) விளக்கம் அளிக்க தயாராக இருக்கும்போது, தந்தை வர (ராஜ்யசபாவுக்கு) வேண்டிய அவசியம் இல்லையே என்று கூறியிருந்தார் அவர்.
ஆனால் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ராஜ்யசபாவில் பேசிய பேச்சுக்குப் பிறகு தான் ஒரு "பெரியப்பா" என்பதை நிரூபித்து விட்டார். மன்மோகன் சிங்கின் பேச்சைப் புகழாதவர்களே இல்லை. மோடியை இந்த விஷயத்தில் தூக்கிச் சாப்பிட்டு விட்டார் பொருளாதார மேதையாக வர்ணிக்கப்படும் மன்மோகன் சிங் என்பதே சமூக வலைதளங்களின் தீர்ப்பாகவும் உள்ளது.
என்னதான் சிலர் கடைசியில் ஒரு வழியாக மன்மோகன் சிங்குக்குப் பேச்சு வந்து விட்டது (திருவிளையாடல் சிவாஜி படத்தைப் போட்டு மீம்ஸ் வேறு) என்று கேலி செய்தாலும் கூட மன்மோகன் சிங்கின் பேச்சு மோடி அரசை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தி விட்டதாக பலரும் கூறுகிறார்கள்.
நீங்க அப்பான்னா.. நான் பெரியப்பா பாஸ்!
தனது பேச்சின் மூலம் மோடி "அப்பா" என்றால், மன்மோகன் சிங் "பெரியப்பா" என்பதை நிரூபித்து விட்டதாக காங்கிரஸார் காலரைத் தூக்கி விட்டுக் கொண்டு பேசி வருகிறார்கள். இவர்களின் கிண்டலைப் பார்த்து பாஜகவினருக்குததான் தர்மசங்கடமாகி விட்டது.
மெளனம் கலைந்தது
மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது அதிகம் பேசியதில்லை. இதற்காக அவர் கடுமையாக விமர்சிக்கப்பட்டாரும் கூட. பலமுக்கியப் பிரச்சினைகளில் அவர் கருத்தே தெரிவித்தில்லை. இதனால் அவரை நாடாளுமன்றத்திலும், வெளியிலும் பாஜகவினர் மிகக் கடுமையாக விமர்சிக்கவும் செய்தனர்.
மக்களுக்காக குரல் கொடுத்த சிங்
ஆனால் மன்மோகன் சிங் முதல் முறையாக மிக நீண்ட பேச்சைக் கொடுத்துள்ளார். அதுவும் தெருத் தெருவாக ரூபாய் நோட்டுக்களுடன் அலைந்து கொண்டிருக்கும் மக்களுக்காக அவர் பேசியது காங்கிரஸாரை மட்டுமல்ல, ஒட்டுமொத்த மக்களின் கைத்தட்டல்களையும் சேர்த்துக் கொடுத்து விட்டது.
சிங் சொன்னால் சரியாக இருக்கும்
பொருளாதாரம் தெரியாத பலரும் கூட மன்மோகன் சிங் சொன்னால் சரியாகத்தான் இருக்கும் என்று பேச ஆரம்பித்து விட்டனர். காரணம், மன்மோகன் சிங் பொருளாதார நிபுணராகவும் இருப்பதால், அவர் ஆராய்ந்து பார்த்துதான் பேசியிருப்பார் என்பதே மக்களின் தீர்ப்பாக உள்ளது.
புள்ளி விவரத்துடன்
மன்மோகன் சிங் ரிசர்வ் வங்கி ஆளுநராக இருந்தவர் (அவருக்கு அப்பாயின்ட்மென்ட் ஆர்டர் கொடுத்தவர்தான் தற்போதைய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி), நிதியமைச்சராக இருந்தவர். நாட்டின் பொருளாதாரத்தை மாற்றியமைத்த பெருமைக்குரியவர். 2 முறை பிரதமராக இருந்தவர். இத்தனை தகுதிகளுடன் கூடிய மன்மோகன் சிங் புள்ளிவிவரத்துடன் பேசிய பேச்சு ஒட்டுமொத்த நாட்டையும் மின்னல் வேகத்தில் சென்றடைந்துள்ளது.
அதிரடி குற்றச்சாட்டு
அரசாங்கம் சட்டப்பூர்வமாக மக்களிடம் கொள்ளையடிக்கிறது என்று பகிரங்கமாக குற்றம் சாட்டி மன்மோகன் சிங் பேசியதை மக்கள் மனதைத் தொட்டு விட்டது என்பதே உண்மை. காரணம், மக்களின் உணர்வும் கிட்டத்தட்ட அப்படித்தான் உள்ளது. சுவிஸ் வங்கிகளில் குவி்ந்து கிடக்கும் கறுப்புப் பணத்தை மீட்காமல் நம் பணத்தைப் பறிக்கிறதே இந்த அரசு என்பதுதான் மக்களின் ஒரே கேள்வியாக, ஆதங்கமாக, கோபமாக உள்ளது. இதைத்தான் மன்மோகன்சிங் ராஜ்யசபாவில் பிரதிபலித்தார்.
உண்மையைப் பேசினார்
மன்மோகன் சிங் அரசின் திட்டத்தைக் குறை சொல்லாமல், அரை வேக்காட்டுத்தனமாக அதை அமல்படுத்தியதால் நாடு சந்திக்கப் போகும் சிக்கல்களை தெளிவாக எடுத்துரைத்தது மக்களிடமும் நன்றாக ரீச் ஆகியுள்ளது. என்னென்ன பிரச்சினைகளை நாடு சந்திக்கப் போகிறது என்பதையும் எச்சரித்துக் கூறியுள்ளார் மன்மோகன் சிங்.
இதுதான் முதிர்ச்சி
மன்மோகன்சிங்கின் பேச்சில் இடம் பெற்ற விவரங்களை பொருளாதார நிபுணர்கள் வரவேற்றுள்ளனர். மிகச் சரியான பேச்சு இது என்று பலரும் கூறி வருகின்றனர். முதிர்ச்சியா முறையில் தனது கருத்துக்களை, உண்மைகளை மன்மோகன் சிங் எடுத்து வைத்துள்ளதாகவும் அவர்கள் சொல்கிறார்கள்.
மொத்தத்தில் நேற்று நாடு முழுவதம் நேற்று டிரெண்டிங்கில் இருந்தவர் அப்பா இல்லை.. பெரியப்பாதான்!