கர்நாடக அமைச்சர் டி.கே.சிவகுமார் தங்கை வீட்டில் 10 கிலோ தங்கம் பறிமுதல்.. 100 கோடி வரி ஏய்ப்பு?
கர்நாடக மாநில காங்கிரஸ் அமைச்சர் சிவகுமார் ரூ.100 கோடி வரி ஏய்ப்பு செய்ததற்கான ஆவணங்கள் சிக்கியுள்ளதாக வருமான வரித்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.
பெங்களூரு: கர்நாடக காங்கிரஸ் அமைச்சர் சிவக்குமார் ரூ.100 கோடி வரி ஏய்ப்பு செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன, இதே போன்று அவரது தங்கை பத்மாவதி வீட்டில் 10 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பாஜகவின் குதிரை பேரத்தில் இருந்து குஜராத் காங்கிரஸ் எம்எல்ஏக்களை பாதுகாத்த கர்நாடக அமைச்சர் டி.கே.சிவகுமாரின் வீடு, ஈகல்டன் சொகுசு விடுதி உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் இரண்டு நாட்களாக சோதனை நடத்தினர். இதில் ரூ.10 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குஜராத் தேர்தலில் வாக்களிக்க உள்ள காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அணி மாறாமல் தடுக்க வியூகம் வகுத்தது காங்கிரஸ். இதன்படி குஜராத் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பெங்களூருவில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பெங்களூருவில் முகாமிட்டுள்ள குஜராத் பாஜகவினரின் வலையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சிக்காத வகையில் டி.கே.சிவகுமார், அவரது தம்பியும் எம்பியுமான டி.கே.சுரேஷ் குமார், ஆதரவாளர் எம்.எல்.சி. ரவி ஆகியோர் வியூகங்களை வகுத்தனர்.
இதனால் பாஜகவினர் கோடிக்கணக்கில் குதிரை பேரம் நடத்தியபோதும், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கட்சி தாவாமல் இருந்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பாஜக மேலிடம் சிபிஐ, வருமான வரி, அமலாக்கத்துறை ஆகியவற்றை காட்டி, மிரட்டுவதாக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ஏற்கெனவே குற்றம் சாட்டினர்.
இந்நிலையில் வருமான வரித் துறை அதிகாரிகள் பெங்களூருவில் உள்ள கர்நாடக அமைச்சர் டி.கே.சிவக்குமாரின் வீடு, டெல்லியில் உள்ள வீடு, பெங்களூருவில் உள்ள அலுவலகம், மைசூருவில் உள்ள உறவினர்களின் வீடுகள், கனகபுராவில் உள்ள பண்ணை வீடு உட்பட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் ஒரே நேரத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் சுமார் ரூ.11 கோடி அளவிற்கு பணம் மீட்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே அமைச்சர் சிவக்குமார் ரூ.100 கோடி அளவிற்கு வருமான வரி ஏய்ப்பு செய்ததற்கான ஆவணங்கள் சிக்கியுள்ளதாக வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதே போன்று அவரது தங்கை பத்மாவதி வீட்டில் 10 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.