ரூ500 கோடி ஆடம்பர திருமணம்... 'மாபியா' ஜனார்த்தன ரெட்டி சுரங்க நிறுவனத்தில் ஐடி அதிரடி ரெய்டு
சுரங்க மாபியா ஜனார்த்தன ரெட்டியின் அலுவலகங்களில் ஐடி அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
பெங்களூர்: மகளுக்கு ரூ500 கோடியில் ஆடம்பர திருமணம் செய்து வைத்து சர்ச்சையில் சிக்கிய சுரங்க மாபியா ஜனார்த்தன ரெட்டியின் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் இன்று அதிரடி சோதனை நடத்தினர்.
நாட்டில் ரூ500, ரூ1000 நோட்டுகள் செல்லாது என அறிவித்தது முதலே அன்றாடங்காய்ச்சிகள், நடுத்தர மக்கள் நடுத்தெருவில் நின்று வருகின்றனர். பொதுமக்கள் ஒரு நாளைக்கு ரூ500 கூட கிடைக்காமல் அவதிப்பட்ட நேரத்தில் மகளுக்கு ரூ500 கோடியில் ஆடம்பர திருமணத்தை நடத்தினார் சுரங்க மாபியா ஜனார்த்தன ரெட்டி.
சுரங்க முறைகேடு வழக்கில் சிறைக்குப் போன ஜனார்த்தன ரெட்டி தற்போது ஜாமீனில் உள்ளார். இவர் பாஜகவின் முன்னாள் அமைச்சர்... ஆனாலும் பாஜக அவரை கட்சியில் இருந்து நீக்கவில்லை. சுரங்க மாபியா ஜனார்த்தன ரெட்டியின் மகள் திருமணம் குறித்து ராஜ்யசபாவிலும் கேள்விகள் எழுப்பப்பட்டன.
நாடு முழுவதும் இந்த திருமணம் பெரும் சர்ச்சையாக வெடித்தது. இந்த நிலையில் பெல்லாரியில் மாபியா ஜனார்த்தன ரெட்டியின் சுரங்க நிறுவன அலுவலகங்களில் இன்று வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி ஏராளமான ஆவணங்களைப் பறிமுதல் செய்ததாக கூறப்படுகிறது.