சமையல் எரிவாயு மானியம் வேண்டும்...விண்ணப்பித்து சர்ச்சையில் சிக்கிய காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக்
ஸ்ரீநகர் : சமையல் எரிவாயு மானியம் வேண்டும் என்று விண்ணப்பித்த ஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் முதலமைச்சர் ஃபரூக் அப்துல்லாவுக்கு எதிராக சர்ச்சை வெடித்துள்ளது.
வசதி படைத்தவர்கள் எரிவாயு சிலிண்டருக்கான மானியத்தை விட்டுக்கொடுக்குமாறு மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. இதற்காக பல்வேறு விழிப்புணர்வு விளம்பரங்களையும் மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் முன்னாள் முதலமைச்சர் பரூக் அப்துல்லா, சமையல் எரிவாயு மானியம் வேண்டி விண்ணப்பித்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
பிரதான எதிர்க்கட்சியான தேசிய மாநாட்டுக் கட்சி தலைவரான அப்துல்லா, கடந்த ஆகஸ்ட் 14-ம் தேதி ஆதார் அல்லாத சமையல் எரிவாயு மானியம் தொடர்பான விண்ணப்பத்தை நிரப்பி, துர்கா நாகில் உள்ள எரிவாயு விநியோகஸ்தரிடம் சமர்ப்பித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலின்போது பரூக் அப்துல்லா தனக்கு ஆண்டுக்கு 10 லட்சம் ரூபாய் வருவாய் வருவதாகவும், ரூ.13 கோடிக்கும் அதிகமான சொத்துக்கள் இருப்பதாகவும் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இவ்வளவு வசதி படைத்த ஃபரூக் அப்துல்லா எரிவாயு மானியத்திற்கு விண்ணப்பித்திருப்பதை ஆளுங்கட்சியான மக்கள் ஜனநாயக கட்சி விமர்சித்துள்ளது.
இது குறித்து பேசிய அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரெஹ்மான் பாரா, அவர் (பரூக் அப்துல்லா) ஒரு இளவரசர் என்று நினைத்துக் கொண்டிப்பதாகவும், இவ்வளவு சொத்து இருந்தும், மானியம் கேட்டு விண்ணப்பிக்கிறார் என்றும் விமர்சித்துள்ளார்.
அவர் ஏழை என்றால், 6 வருடங்களுக்கு இலவசமாக அவரது வீட்டுக்கு கேஸ் சிலிண்டர் வழங்குகிறோம் என்றும் மக்கள் ஜனநாயகக் கட்சி அதிரடியாக அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications