சசிகலாவின் பரோல் கோரிக்கை நிராகரிப்பு.. கர்நாடக சிறைத்துறை அதிரடி!
பெங்களூர்: கணவர் நடராஜன் உடல்நிலையை காரணம் காட்டி, 15 நாட்கள் பரோல் கேட்டு பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையிலுள்ள சசிகலா விண்ணப்பத்திருந்த நிலையில், அதை சிறைத்துறை எஸ்.பி நிராகரித்துள்ளார்.
தொழில்நுட்ப காரணங்கள் அடிப்படையில் பரோல் நிராகரிக்கப்பட்டுள்ளது என்று ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது. கூடுதல் தகவலுடன் மனு தாக்கல் செய்ய சிறைத்துறை கேட்டுக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே புதிதாக மனு தாக்கல் செய்ய சசிகலா திட்டமிட்டுள்ளார்.
மனுவில் போதிய விவரம் இல்லை என்பதே இந்த நிராகரிப்புக்கு காரணம் என்று சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதேநேரம், கர்நாடக மாநில அதிமுக செயலாளர் புகழேந்தியோ, மனு இன்னும் பரிசீலனையில் இருப்பதாக டிவி சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.
இதனிடையே, சசிகலா பரோலில் அனுப்பப்பட்டால் அவருக்கு பாதுகாப்பு அளிப்பது குறித்து சென்னை காவல்துறை உரிய உத்தரவாதத்தை அளிக்க வேண்டியது கட்டாயம். எனவே தமிழக காவல்துறை நெகட்டிவ் ரிப்போர்ட் கொடுத்துவிட்டதாக தினகரன் தரப்பில் பெயர் தெரிவிக்க விரும்பாத சில நிர்வாகிகள் குற்றம்சாட்டுகிறார்கள்.
ஆனால், கர்நாடக சிறைத்துறை அதுபோன்ற தகவலை வெளியிடவில்லை.