மன்மோகன் சிங் நல்ல மனிதர்தான் ஆனால்.... அருண் ஜெட்லி
டெல்லி: மன்மோகன்சிங் நல்ல மனிதர்தான் ஆனால் நல்ல தலைவர் கிடையாது என்று பாஜக மூத்த தலைவர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளில் பாஜக கூட்டணி வெற்றி பெறும் என்று தகவல் வெளியாகியுள்ள நிலையில், அருண்ஜெட்லி தனது வலைத்தளத்தில் மன்மோகன் பற்றி எழுதியிருப்பதாவது:
மன்மோகன்சிங் சந்தேகமேயில்லாமல் ஒரு திறமையான நிதி அமைச்சராக பதவி வகித்தவர். 1991ல் கொண்டு வந்த பொருளாதார சீர்திருத்தங்களை செயல்படுத்த பிரதமராக இருந்த நரசிம்மராவிடமிருந்து சிறந்த ஒத்துழைப்பை மன்மோகன்சிங் பெற்றார். ஆனால் சோனியாகாந்தியின் கீழ், மன்மோகன்சிங்கால் பெரிதாக எதையும் செய்துவிட முடியவில்லை.

சோனியா காந்தியால் 'அறிவிக்கப்பட்ட' பிரதமராக மட்டுமே மன்மோகனால் இருக்க முடிந்தது. சோனியாகாந்தி சில காரணங்களால் பிரதமர் பதவிக்கான போட்டியில் இருந்து தனதுபெயரை வாபஸ் பெற்றுவிட்டு, மன்மோகனை முன்னிறுத்தினார்.
அந்த எல்லைக்குள்தான் மன்மோகனால் பணியாற்ற முடிந்தது. நாட்டு மக்களிடம் உரையாற்றியபோதெல்லாம் மன்மோகன்சிங் ஒரு தலைவராக தன்னை காண்பிக்கவில்லை. ஏனெனில் அவருக்கு நன்கு தெரியும், அதிகாரம் எல்லாம் கட்சியிடமும், அதை கட்டுப்படுத்தும் குடும்பத்திடமும்தான் உள்ளது என்பது. இவ்வாறு ஜெட்லி கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications