மெகபூபா முப்தி கட்சியில் இணைந்தார் பிரிவினைவாத குரியத் இயக்கத்தின் தலைவர் சையத் சலீம் கிலானி
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் பிரிவினைவாத இயக்கங்களில் ஒன்றான குரியத் மாநாட்டு கட்சியின் மூத்த தலைவர் சையத் சலீம் கிலானி இன்று முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி முன்னிலையில் மக்கள் ஜனநாயகக் கட்சியில் இணைந்தார். ஜம்மு காஷ்மீர் பிரிவினைவாத தலைவரான சிறையில் இருக்கும் ஷபீர் அகமது ஷாவின் வலது கரமாக செயல்பட்டவர் சையத் சலீம் கிலானி.
ஜம்மு காஷ்மீரில் 3 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. ஜம்மு காஷ்மீரில் பாஜக-ஜேடியூ, மக்கள் ஜனநாயகக் கட்சி, காங்கிரஸ்- தேசிய மாநாட்டு கட்சி கூட்டணி உள்ளிட்டவை தேர்தல் களத்தை எதிர்கொண்டுள்ளன.

இந்த நிலையில் ஜம்மு காஷ்மீரில் புதிய திருப்பமாக பிரிவினைவாத இயக்கத் தலைவராக இருந்த சையத் சலீம் கிலானி இன்று குரியத் மாநாட்டுக் கட்சியில் இருந்து விலகி மக்கள் ஜனநாயகக் கட்சியில் இணைந்தார். ஸ்ரீநகரில் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார் கிலானி. அப்போது பேசிய கிலானி, ஜம்மு காஷ்மீர் பிரச்சனைக்கு அரசியல் ரீதியாக மட்டுமே தீர்வு காண முடியும் என நம்புகிறேன். வன்முறை பாதையால் ஜம்மு காஷ்மீர் சிக்கலுக்குத் தீர்வு காண முடியாது; பேச்சுவார்த்தைகள் மூலம்தான் தீர்வை உருவாக்க முடியும் என்றார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய மெகபூபா முப்தி, வாஜ்பாய் பிரதமராக இருந்த போது அத்வானிதான் குரியத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அமைதியான பேச்சுவார்த்தைகள் மூலம் காஷ்மீர் பிரச்சனைக்கு தீர்வு காண்பதை கிலானி விரும்புகிறார். ஜம்மு காஷ்மீர் தேர்தலில் மக்கள் ஜனநாயகக் கட்சி சார்பில் கிலானியும் போட்டியிட வாய்ப்பு தரப்பட்டது. ஆனால் கிலானி இதனை ஏற்காததால் வேறு ஒருவரை களமிறக்குவோம். ஜம்மு காஷ்மீர் பிரச்சனைக்கு இந்திய அரசியல் சாசனத்துக்கு உட்பட்ட வகையில் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் என்பதுதான் மக்கள் ஜனநாயகக் கட்சியின் நிலைப்பாடு என்றார்.
இதேபோல முன்னாள் காங்கிரஸ் தலைவர் அல்தாப் அகமது மாலிக், தேசிய மாநாட்டுக் கட்சியின் பாபு ஜஜில்வான் லால், சுகைல் புகாரி, முன்னாள் எம்.எல்.ஏக்கள் மும்தாஜ் கான், அப்துல் ரஹீம் ராதெர், சமூக செயல்பாட்டாளர் இர்பான் ஹபீஸ் லோனே உள்ளிட்டோரும் இன்று மக்கள் ஜனநாயகக் கட்சியில் இணைந்தனர்.












Click it and Unblock the Notifications