நோன்பிருந்த தொழிலாளிக்கு சப்பாத்தியை திணித்த சிவசேனா எம்.பி: ஒமர் அப்துல்லா கண்டனம்
ஸ்ரீநகர்: ரம்ஜான் நோன்பு இருந்த முஸ்லிம் ஒருவரை வற்புறுத்தி சாப்பிட வைத்த சிவசேனா எம்.பி. ராஜன் விகாரேவிற்கு ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் உள்ள மகாராஷ்டிர மாநில இல்லத்தில் ஐ.ஆர்.சி.டி.சி. உணவு வழங்கும் பணியினை மேற்கொண்டு வருகிறது. கடந்த வாரம் மகாராஷ்டிரா சதானுக்கு வந்த சிவசேனை எம்.பி.,க்கள் 11 பேர், தங்களுக்கு சாப்பிட மகாராஷ்டிர மாநில பாரம்பரிய உணவு வேண்டும் என்று கேட்டுள்ளனர்.

ஆனால் பணியில் இருந்த ஊழியர்கள் அவர்களுக்கு சப்பாத்தியை பரிமாறியுள்ளனர். இதனால் சிவசேனை கட்சி எம்.பி.க்கள் கோபத்தில் மேற்பார்வையாளரை வலுக்கட்டாயமாக சப்பாத்தியை சாப்பிட வைத்துள்ளனர் என்று கூறப்படுகிறது. அந்த மேற்பார்வையாளர் ஒரு முஸ்லிம். அவர் ரம்ஜான் நோன்பு மேற்கொண்டிருந்தார் என கூறப்படுகிறது.
ரம்ஜான் நோன்பிருந்த ஒரு முஸ்லிமுக்கு உணவை வலுக்கட்டாயமாக சிவசேனா எம்.பி. ராஜன் விகாரே திணித்த வீடியோ காட்சி வெளியிடப்பட்டு பெரும் அமளி ஏற்பட்டு, பலதரப்பிலிருந்தும் கண்டனங்கள் எழுந்துள்ளன.
இந்த சம்பவத்திற்கு காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். தன்னுடைய சமூகவலைத்தளப் பக்கத்தில் கருத்து கூறியுள்ள ஒமர், இது வெட்கக்கேடானது என்று குறிப்பிட்டுள்ளார்.
ஒரு முஸ்லீம் எம்.பி இதுபோல செய்திருந்தால் அவரது நடவடிக்கை எப்படி இருந்திருக்கும்? சைவ உணவு உண்ணும் முஸ்லீம் அல்லாதவரின் வாயில் மாமிச உணவை திணித்தால் இந்த சிவசேனா எம்.பி பேசாமல் விட்டுவிடுவாரா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.












Click it and Unblock the Notifications