ஜம்மு காஷ்மீர் ஆளுநரில் யார் ஆட்சி? ஆளுநர் வோராவுடன் பா.ஜ.க. தலைவர்கள் சந்திப்பு
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் புதிய ஆட்சி அமைப்பது குறித்து ஆளுநர் வோராவுடன் பா.ஜ.க. தலைவர்கள் இன்று ஆலோசனை நடத்தினர்.
87 உறுப்பினர்களைக் கொண்ட ஜம்மு காஷ்மீர சட்டசபை தேர்தலில் மக்கள் ஜனநாயகக் கட்சி (பி.டி.பி) 28 இடங்களையும் பா.ஜ.க. 25 இடங்களையும் கைப்பற்றியது.

ஒமர் அப்துல்லாவின் தேசிய மாநாட்டு கட்சி (என்.சி) 15, காங்கிரஸ் 12 இடங்களைக் கைப்பற்றின. ஆட்சி அமைக்கத் தேவையான 44 இடங்களை எந்தக் கட்சியும் பெறவில்லை.
இதனால் இம்மாநிலத்தில் புதிய ஆட்சி அமைவதில் இழுபறி நீடித்து வருகிறது. ஜனவரி 19-ந் தேதிக்குள் புதிய அரசு பொறுப்பேற்க வேண்டும் இல்லையெனில் இங்கு ஜனாதிபதி ஆட்சி பிரகடனப்படுத்தும் நிலை உள்ளது.
இந்நிலையில் ஆளுநர் வோராவை பி.டி.பி. தலைவர் மெஹ்பூபா முப்தி நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தியிருந்தார். இந்த சந்திப்பைத் தொடர்ந்து ஆட்சி அமைப்பதில் அவசரம் காட்டவில்லை என்று மெஹ்பூபா கூறியிருந்தார்.
இதனிடையே ஜம்மு காஷ்மீர் மாநில பா.ஜ.க. தலைவர்கள் இன்று ஆளுநர் வோராவை சந்தித்து புதிய அரசு குறித்து ஆலோசனை நடத்தினர். ஜம்மு காஷ்மீரத்தில் பி.டி.பி.- பா.ஜ.க. கூட்டணி அரசு அமையவே வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. ஓரிரு நாட்களில் ஜம்மு காஷ்மீர் குழப்பத்துக்கு முடிவு கிடைக்கும் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications