பெண் டாக்டரிடம் பாலியல் சில்மிஷம் .. காஷ்மீர் அமைச்சர் ராஜினாமா.. கைதாகிறார்
ஸ்ரீநகர்: பெண் டாக்டருக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாக சர்ச்சைக்குள்ளான ஜம்மு காஷ்மீர் மாநில சுகாதாரத் துறை அமைச்சர் ஷபீர் அகமது கான் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவரைப் போலீஸார் கைது செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அந்தப் பெண் டாக்டர் ஒரு மூத்த காஷ்மீர் பிரிவினைவாத தலைவரின் நெருக்கமான உறவினர் என்று கூறப்படுகிறது. இவர் ஸ்ரீநகர் போலீஸில் ஷபீர் அகமது கான் மீது ஒரு புகார் கொடுத்தார்.
அதில், ஸ்ரீநகரில் உள்ள தனது அலுவலகத்திற்கு அமைச்சர் என்னை அழைத்தார். நான் போயிருந்தேன். அப்போது மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத்தின் அறிவிப்பு ஒன்று தொடர்பாக என்னிடம் விவரம் கேட்பது போல கேட்டார்.
பின்னர் என்னை அருகில் உள்ள ஒரு சிறிய அறையில் காத்திருக்குமாறு கூறினார். அங்கு வந்த அவர் என்னிடம் தவறாக நடக்க முயன்றார், ஆபாசமாகவும் பேசினார். பின்னர் என்னிடம் பாலியல் அத்துமீறலிலும் ஈடுபட்டார் என்று கூறியிருந்தார்.
இதையடுத்து அப்பெண் டாக்டர் கொடுத்த புகாரின் பேரில், போலீஸார் மானபங்கப்படுத்த முயன்றது, பெண்ணிற்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டது, குற்ற் செயலில் ஈடுபடுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.
இதையடுத்து ஷபீர் அகமது கான் ராஜினாமா செய்ய வேண்டும், அவரைக் கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன. இதையடுத்து அவரரை ராஜினமா செய்யுமாறு காங்கிரஸ் மேலிடமும் கேட்டுக் கொண்டது. அதன்படி தற்போது ஷபீர் அகமது கான் ராஜினாமா செய்துள்ளார்.
இதையடுத்து அவர் விரைவில் கைது செய்யப்படக் கூடும் என்று தெரிகிறது.
கடந்த 2009ம் ஆண்டு தேசிய மாநாடு - காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு வந்தது. அதன் பிறகு இதுபோன்ற சிக்கல்களில் மாட்டி ராஜினாமா செய்யும் 3வது காங்கிரஸ் அமைச்சர் ஷபீர் அகமது கான் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications