மின் கட்டண உயர்வு.. பொறுப்பற்ற நிர்வாகம்.. ஜம்மு காஷ்மீரில் வெகுண்டெழுந்து வாக்களித்த மக்கள்
ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடந்தது. இதில் மக்கள் காலை முதல் நீண்ட வரிசையில் நின்று வாக்குகளை பதிவு செய்தனர். இது வரலாற்றின் முக்கிய நிகழ்வு என தேர்தல் ஆணையமே பெருமையாக கூறியுள்ளது. மக்கள் ஆர்வத்துடன் வாக்களிக்க நிறைய காரணங்கள் உள்ளன.
ஜம்மு ஜகாஷ்மீரில் மூன்று கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடத்தப்படவுள்ளது. அதன்படி கடந்த வாரம் 24 தொகுதிகளுக்கு முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்நிலையில் 26 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. இன்றைய தினம் ஆறு மாவட்டங்களில் தேர்தல் நடைபெற்றது. அங்கு மொத்தம் 25.7 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.

காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. தேர்தல் ஆணையம் வெளியிட்ட தகவல்படி 56.79 சதவீதம் வாக்குப்பதிவு ஆகியுள்ளது. இதை வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வாக தேர்தல் ஆணையமும், அரசியல் கட்சிகளும் பார்க்கின்றனர்.
"ஜம்மு காஷ்மீர் மக்கள் வாக்களிக்க அதிக ஆர்வம் காட்டுகின்றனர். அனைத்து பகுதிகளில் இருந்தும் மக்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது." என்று தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார்.
வாக்களிப்பதற்காக மக்கள் நீண்ட வரிசையில் நின்றாலும், மக்கள் உற்சாகமாகவே இருந்தனர். "இந்தத் தேர்தலுக்காக நாங்கள் நீண்ட காலமாக காத்திருக்கிறோம். அப்படி இருக்கும்போது இந்த வரிசையில் சில நிமிடங்கள் காத்திருக்க மாட்டோமா." என்கின்றனர் மக்கள்.
கண்டர்பெல் தொகுதியில் முன்னாள் முதலமைச்சரும், தேசிய மாநாட்டு கட்சி துணை தலைவருமான உமர் அப்துல்லா போட்டியிடுகிறார். மிகவும் முக்கிய வேட்பாளரான உமர் அப்துல்லாவை எதிர்த்து மட்டும், சுமார் 14 வேட்பாளர்கள் அங்கு போட்டியிடுகின்றனர். கங்கன் தொகுதியில் மியன் மெஹர் அலி என்பவர் நான்காவது தலைமுறை அரசியல்வாதியாக தேர்தலில் போட்டியிடுகிறார். இந்த தொகுதியில் எப்போதுமே வாக்குப்பதிவு அதிகம் இருக்கும்.
"அடிப்படையில் எங்களுக்கு கீழ்மட்ட அளவுக்கு எந்த உதவியும் கிடைப்பதில்லை. அதிகாரிகள் எங்களின் பிரச்னைகளை புரிந்து கொள்வதில்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் சட்டமன்ற உறுப்பினர் மட்டுமே எங்களுக்காக பணியாற்றுவார் என்பது எங்களின் ஆழமான நம்பிக்கை." என்கின்றனர் மக்கள். ஜம்மு காஷ்மீர் மக்கள் இவ்வளவு ஆர்வத்துடன் வாக்களிக்க வேறு சில காரணங்களும் இருக்கவே செய்கின்றன.
முக்கியமாக மின் கட்டண உயர்வால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். "முன்பு சராசரியாக மூன்று மணி நேரத்துக்கு ரூ,100 கட்டணம் செலுத்தினோம். அதுவே இப்போது ரூ.1,000 கட்டணம் செலுத்துகிறோம். எங்களுக்கு வருமானமே இல்லை. பிறகு நாங்கள் எப்படி இவ்வளவு கட்டணத்தை செலுத்த முடியும். இங்கு பலரும் தினக்கூலிகள். விவசாயப் பணியோ, கிடைக்கும் ஏதாவது வேலையை பார்த்துக் கொண்டிருக்கிறோம்." என்கின்றனர் மக்கள்.
அரசு நிர்வாகத்தில் உள்ள பொறுப்பற்ற தன்மை மக்களை கடுமையாக பாதிப்படைய செய்துள்ளது. "ரேஷன் அட்டையில் ஒரு குடும்பத்துக்கு 5 கிலோ அரிசி தருகின்றனர். ஒரு குடும்பத்தில் 8 பேர் இருக்கிறார்கள் என்றால், இது எப்படி போதுமானதாக இருக்கும். இதையெல்லாம் புரிந்துகொள்ளக் கூடிய ஒரு மக்கள் பிரநிதியிடம் இதற்கான தீர்வை எதிர்பார்க்கிறோம்.
தற்போதுள்ள நிர்வாகம் மத்திய அரசின் ரிமோட் கன்ட்ரோல் போல இயங்குகிறது. அதேபோல வேலை வாய்ப்பு மிகப்பெரிய பிரச்னையாக உள்ளது. இதனால் பல இளைஞர்கள் திறமை இருந்தும் அதை வெளிகொண்டு வர முடியாமல் திணறுகிறார்கள். இப்படி நாங்கள் தினம் தினம் சந்திக்கும் ஏராளமான பிரச்னைகளில் தீர்வு கொடுப்பதற்கான உறுப்பினரை தேர்வு செய்ய வந்துள்ளோம்." என்றும் மக்கள் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications