காஷ்மீர் மக்கள் கோபத்தில் உள்ளனர்.. அரசு பொய் சொல்கிறது.. டெல்லி திரும்பிய டி.ராஜா குற்றச்சாட்டு
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் நிலைமை மிக மோசமாக உள்ளதாக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி ராஜா தெரிவித்தார்.
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு, அந்த மாநிலத்தில் உள்ள நிலைமையை நேரில் பார்த்து ஆய்வு செய்வதற்காக, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி தலைமையில், எதிர்க் கட்சித் தலைவர்களின் குழுவொன்று இன்று காஷ்மீர் சென்றிருந்தது.
அவர்களை உள்ளே விடாமல் விமான நிலையத்திலிருந்து டெல்லிக்கு திருப்பி அனுப்பிவிட்டனர்.
இதுகுறித்து டெல்லி விமான நிலையத்தில், டி.ராஜா கூறியதாவது: சென்ற முறை நானும் சீதாராம் யெச்சூரியும் ஸ்ரீநகர் சென்றபோதும் திருப்பி அனுப்பப்பட்டோம். இந்த முறை காஷ்மீர் ஆளுநர் விடுத்த, அழைப்பை ஏற்று ராகுல் காந்தி உட்பட பல்வேறு கட்சிகளின் முக்கியத் தலைவர்கள் காஷ்மீர் சென்றோம். ஆனால் இப்போதும் போன இடத்தில் எங்களை ஒரு அறையில் அடைத்து வைத்து விட்டு ஒரு ஆணையை, காட்டினார்கள். நீங்கள் போராட்டத்தை தூண்ட வருகிறீர்கள், எனவே, உங்களை திருப்பி அனுப்புகிறோம் என்று தெரிவித்தனர். இதற்கு நாங்கள் வன்மையான கண்டனத்தை தெரிவித்தோம்.
காஷ்மீரின் உண்மை நிலை தெரிந்துவிடும் என்பதற்காக எங்களை உள்ளேயே விடவில்லை.. திருச்சி சிவா ஆவேசம்
விமானத்தில் செல்லும்போது சாதாரண காஷ்மீர் மக்களை சந்தித்து பேசினோம். அப்போது அங்கு நிலைமை மிக மிக மோசமாக இருக்கிறது என்பது தெரிய வந்தது. அங்கு நோய்வாய்ப்பட்டவர்கள் மருத்துவமனைக்கு செல்வதற்கு கூட சாத்தியமில்லாமல் இருக்கிறது. காஷ்மீருக்கு வெளியே இருக்கக்கூடிய மக்கள், காஷ்மீர் மாநிலத்தில் உள்ள தங்களின் பெற்றோர்கள், உறவினர்களை தொடர்பு கொள்ள முடியாத சூழ்நிலை உள்ளது.
அங்கு தொலைபேசி, இணையதளம் வேலை செய்யாமல் உள்ளன. பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருந்தாலும் காலியாக இருப்பதாக தெரிவிக்கிறார்கள். அங்குள்ள மக்கள் மிகுந்த கோபத்தில் உள்ளனர். ஆளுநர் பொய் சொல்கிறார், பிரதமர் பொய் சொல்லுகிறார். அரசே இப்படி பொய் சொல்லும்போது, நாங்கள் யாரை நம்புவது என்று அந்த மக்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.
அரசு சொல்வது அப்பட்டமான பொய் என்பதை நாம் உணர வேண்டும். அங்கு நிலைமை சகஜமாக இல்லை. அங்கு அமைதி திரும்ப எத்தனை நாள் பிடிக்கும்? அடுத்து என்ன ஆகும்? என்பதை இப்போது சொல்லமுடியாது. இவ்வாறு டி.ராஜா தெரிவித்தார்.