விரைவில் ஜம்மு காஷ்மீரில் தேர்தல்.. அதன்பின் மாநில அந்தஸ்து.. உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவிப்பு!
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் விரைவில் சட்டசபை தேர்தல் நடத்தப்படும். அதன்பின் ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீரில் இருக்கும் வெளிமாநில தொழிலாளர்கள் மீது கடந்த இரண்டு வாரமாக கொடூர தாக்குதல் நடத்தப்பட்டு இருக்கிறது. காஷ்மீருக்கு மீண்டும் வெளிமாநில தொழிலாளர்கள், வெளிமாநில மக்கள் வருவதை விரும்பாமல் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதுவரை அங்கு 11 வெளிமாநில தொழிலாளர்கள் கொல்லப்பட்டு உள்ள நிலையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஜம்மு காஷ்மீரில் நெற்றி பார்வையிட்டார். மூன்று நாள் பயணமாக அவர் ஜம்மு காஷ்மீர் சென்றுள்ளார்.

2019
2019ல் ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டு லடாக் தனியாக பிரிக்கப்பட்டு இரண்டு யூனியன் பிரதேசங்களாக மாற்றப்பட்டது. அதன்பின் இப்போதுதான் முதல்முறையாக அமித் ஷா ஜம்மு காஷ்மீர் சென்றார். இதில் பல்வேறு இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளை பார்வையிட்டார். அதன்பின் ஆளுநர் மாளிகையில் துணை நிலை ஆளுநர், உயர் அதிகாரிகள், உளவுத்துறை அதிகாரிகளுடன் அமித் ஷா ஆலோசனை செய்தார்.

அமித் ஷா பேட்டி
இந்த நிலையில் தனது ஜம்மு காஷ்மீர் பயணம் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மீட்டிங்கில் பேசிய அமித் ஷா, ஜம்மு காஷ்மீர் 2019க்கு பின் அமைதியாக உள்ளது. இங்கு தீவிரவாத அமைப்புகள் ஒடுக்கப்பட்டு உள்ளன. தாக்குதல்கள் தடுக்கப்பட்டு இருக்கின்றன. ஜம்மு காஷ்மீரில் தொகுதி வரையறை ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

தொகுதி வரையறை
ஜம்மு காஷ்மீரில் விரைவில் எல்லைகள் தீர்மானிக்கப்பட்டு தொகுதிகள் பிரிக்கப்படும். அதன்பின் கண்டிப்பாக தேர்தல் நடக்கும். இந்த தடுப்பதற்கான யோசனையே இல்லை. தேர்தல் நடந்த பின் முறையாக மீண்டும் ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்கப்படும். இதில் மாற்று கருத்துக்கு இடமே இல்லை. மீண்டும் ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படாது.

சிறப்பு அந்தஸ்து
அந்த பேச்சுக்கே இடமில்லை. ஜம்மு காஷ்மீர் மக்களின் பாதுகாப்பிற்காக சில கசப்பான கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டியதாக இருந்தது. ஏன் கட்டுப்பாடுகள் இவ்வளவு தீவிரமாக இருக்கிறது, ஏன் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது என்று பலர் கேள்வி எழுப்பினார்கள். மக்களின் உயிர்தான் நமக்கு முக்கியம். இங்கே 70 வருடமாக வெறும் 3 குடும்பங்கள்தான் ஆட்சி செய்தது.

70 வருட ஆட்சி
இந்த 70 வருடத்தில் 40 ஆயிரம் பேருக்கு அதிகமானோர் கொல்லப்பட்டனர். அதற்கு யாரிடமாவது பதில் இருக்கிறதா? ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட போது பலர் கலவரங்களை தூண்ட நினைத்தனர். ஆனால் அதை எல்லாம் நாங்கள் முறியடித்தோம். முறையான கட்டுப்பாடுகள் போடப்பட்ட காரணத்தால் உயிர் சேதங்கள் தடுக்கப்பட்டது.

முன்னேற்றம்
காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு பின் பல புதிய திட்டங்கள் வந்துள்ளன. இங்கு முதலீடுகள் அதிகரித்துள்ளது. பல நலத்திட்டங்கள் கொண்டு வரப்பட்டு உள்ளன. இரண்டு வருடங்களுக்கு முன் ஜம்மு காஷ்மீர் என்றால் தீவிரவாதம்தான். ஆனால் இப்போது ஜம்மு காஷ்மீர் என்றால் முன்னேற்றம், வளர்ச்சி, பாதுகாப்பு என்ற நிலை ஏற்பட்டுள்ளது என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications