போலி அதிகாரியாக நடித்து 50ஆயிரம் லஞ்சம் கேட்ட நபர்.. கோவை சரளாபோல் வெளுத்த ஜார்க்கண்ட் பெண் வீடியோ
ஜார்க்கண்ட்: லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரி போல் நடித்து ரூ 50 ஆயிரம் லஞ்சமாக கேட்டவரை நடு ரோட்டில் செருப்பை கழட்டி பெண் ஒருவர் அடித்த வீடியோ வைரலாகி வருகிறது.
ஜார்க்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூரில் போலி லஞ்ச ஒழிப்பு அதிகாரி போல் நடித்த நபரை பெண் ஒருவர் தனது நண்பர்கள் உதவியுடன் கையும் களவுமாக பிடித்து நடு ரோட்டில் நிற்க வைத்து செருப்பை கழற்றி அடித்தார்.
பின்னர் அந்த பெண்ணை சமாதானம் செய்த போலீஸார் அந்த நபரை கைது செய்து அழைத்து சென்றனர். இதுகுறித்து அந்த பெண் கூறுகையில் எனது பெயர் ராக்கி சர்மா. காட்ஷிலா என்ற பகுதியை சேர்ந்தவர் ஃபாலேந்திர மேத்தோ.
இவர் கடந்த சில நாட்களுக்கு முன் ஏராளமான பெண்களுடன் பல்வேறு இடங்களில் உள்ள வீடுகளில் சோதனை செய்ய வந்தார். அவருடன் அந்த பெண்கள் பணியாற்றுகிறார்கள் என நினைத்தேன். இதனால் எனது தனிப்பட்ட பிரச்சினை ஒன்றை தீர்த்து வைக்க கோரி அவரிடம் உதவி கேட்டேன்.
#WATCH Jamshedpur: A woman thrashed a man, in Mango area, who posed as an Anti-Corruption Bureau Officer and demanded Rs 50,000 from her. The woman called him on the pretext of giving the money to get him arrested. Police is interrogating the man. #Jharkhand pic.twitter.com/98z9YDHOGd
— ANI (@ANI) May 8, 2019
அவரும் எனது பிரச்சினையை சட்டரீதியாக தீர்க்க ரூ 50 ஆயிரம் லஞ்சமாக கேட்டார். இதனால் சந்தேகமடைந்த நான் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகளிடம் விசாரித்தேன். அப்போதுதான் அந்த நபர் போலியானவர் என்றும் சட்டப்படி நோட்டீஸ் அனுப்பாமல் எந்த அதிகாரியும் சோதனை நடத்த வரமாட்டார்கள் என்பதும் தெரியவந்தது.
பின்னர் என்னை தொடர்பு கொண்ட மேத்தோவிடம் நான் 50 ஆயிரம் கொடுக்க மாட்டேன் என்றேன். அதற்கு அந்த நபர் நான் பணம் தராவிட்டால் எனது வீட்டில் சோதனை நடத்தி சிறையில் தள்ளிவிடுவதாக மிரட்டினார். இதையடுத்து அவரிடம் பணம் கொடுப்பதாக ஒப்புக் கொண்டு அவரை வரவழைத்தேன்.
அதற்கு முன்னதாக அவர் குறித்து போலீஸிடமும் நண்பர்களிடமும் தகவல் தெரிவித்திருந்தேன். சரியாக அவர் என் வீட்டுக்கு வந்தபோது அவரை மடக்கிப் பிடித்தோம் என்றார் ராக்கி சர்மா.