ஜேஎன்யூ தேர்தல் முடிவு எதிரொலி.. மாணவர்கள் இடையே கலவரம்.. ஏபிவிபி அத்துமீறல்!
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்க தேர்தல் முடிவு வெளியானதை ஒட்டி நேற்று இரவில் இருந்து இன்று மதியம் வரை அந்த கல்லூரியில் மாணவர்கள் இடையே சண்டை நடந்துள்ளது.
டெல்லி: டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்க தேர்தல் முடிவு வெளியானதை ஒட்டி நேற்று இரவில் இருந்து இன்று மதியம் வரை அந்த கல்லூரியில் மாணவர்கள் இடையே சண்டை நடந்துள்ளது. முக்கியமாக ஆர்எஸ்எஸ் அமைப்பின் மாணவ பிரிவான ஏபிவிபி கலவரம் செய்துள்ளது.
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்க தேர்தலில் இடதுசாரி அமைப்புகள் மாபெரும் வெற்றிபெற்றுள்ளது. தற்போது அங்கு மாணவ தலைவராக இடதுசாரிகளின் கூட்டமைப்பை சேர்ந்த என். சாய் பாலாஜி என்ற மாணவர் வெற்றிபெற்றுள்ளார்.
இவர் 2617 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றுள்ளார். அதேபோல் எல்லா பதவிகளையும் இடதுசாரிகளின் கூட்டமைப்பை சேர்ந்த மாணவர்களே வென்றுள்ளனர்.
ஏபிவிபி தாக்க முயற்சி
இந்த தேர்தலில் நேற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. ஆனால் நேற்று முதல்நாள் இரவே அங்கு ஆர்எஸ்எஸ் அமைப்பின் மாணவ பிரிவான ஏபிவிபி கலவரம் செய்துள்ளது. அங்கு இருந்த இடதுசாரி மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தி இருக்கிறது. இரவு முழுக்க பல்வேறு முறை இப்படி தாக்குதல் நடத்த முயற்சி செய்துள்ளனர்.
வெற்றிக்கு பின்
இந்த நிலையில்தான் தேர்தலில் இடதுசாரி அமைப்புகள் அமோக வெற்றி பெற்றுள்ளது. ஆனால் அதற்கு பின்பும் ஏபிவிபி அமைப்பு இடதுசாரி மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தி உள்ளது. முன்னாள் இடதுசாரி செயலாளர்கள், மாணவ சங்க உறுப்பினர்கள் மீது ஏபிவிபி அமைப்பை சேர்ந்த மாணவர்கள் தாக்குதல் நடத்தி உள்ளனர்.
|
வீடியோ வெளியானது
இவர்கள் தாக்கப்பட்டது குறித்து வீடியோ வெளியாகி இருக்கிறது, இடதுசாரி மாணவ செயற்பாட்டாளரான ஷீலா ரஷீத் இந்த வீடியோவை தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். முன்னாள் மாணவ கவுன்சிலர் தாக்கப்பட்டது இந்த வீடியோவில் பதிவாகி உள்ளது.
|
தள்ளுமுள்ளு நடந்தது
இந்த வீடியோவின் முடிவில் இதை படம்பிடித்த கேமரா மேனும் தாக்கப்பட்டுள்ளார். அங்கு காவலுக்கு இருந்த பாதுகாவலர்களும் தாக்கப்பட்டு இருக்கிறார். இதனால் இன்று காலையும், நேற்று இரவும் பெரிய தள்ளுமுள்ளு இரண்டு தரப்பு மாணவர்கள் இடையே நடந்து இருக்கிறது.
காலையில் நடந்தது என்ன
இரண்டு தரப்பு மாணவர்களும் காலையில் உருட்டு கட்டை, ஹாக்கி பேட்டுடன் சண்டை போட நின்று இருக்கிறார்கள். கடைசியாக தலைவராக தேர்வான இடதுசாரி மாணவர் என். சாய் பாலாஜி வந்து பேசி, இடதுசாரி மாணவர்களை சமாதானம் செய்துள்ளார். அதன்பின் இடதுசாரி மாணவ அமைப்புகள் சேர்ந்து சென்று டெல்லி போலீசில் புகார் அளித்துள்ளனர்.